Arca da aliança
A Arca da Aliança era o símbolo mais sagrado de Israel — representava a presença de Deus no meio do seu povo. Sobre ela brilhava a glória do Senhor entre os querubins.
உடன்படிக்கைப்பெட்டி
"அவர்கள் சித்தீம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்யவேண்டும். அதன் நீளம் இரண்டரை முழமும், அகலம் ஒன்றரை முழமும், உயரம் ஒன்றரை முழமுமாக இருக்கவேண்டும். நீ அந்தப் பெட்டியை, உள்ளேயும் வெளியேயும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடவேண்டும். அதைச் சுற்றிலும் தங்கத்தினாலான ஒரு விளிம்புச்சட்டத்தைச் செய்யவேண்டும். தங்கத்தினால் நான்கு வளையங்கள் வார்ப்பித்து, அவற்றை அதன் நான்கு கால்களிலும் பொருத்து. அவைகள் ஒரு பக்கத்தில் இரண்டும், மறுபக்கத்தில் இரண்டும் பொருத்தப்பட வேண்டும். சித்தீம் மரத்தினால் கம்புகளைச் செய்து, அவற்றைச் சுத்தத் தங்கத் தகட்டினால் மூடவேண்டும். பெட்டியைச் சுமப்பதற்கு, அந்தக் கம்புகளை பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களில் மாட்டிவை. பெட்டியின் வளையங்களிலேயே அந்தக் கம்புகள் இருக்கவேண்டும். அவைகள் அகற்றப்படாமல் அப்படியே இருக்கவேண்டும். நான் உனக்குத் தரப்போகும் சாட்சிப்பிரமாணத்தை அந்தப் பெட்டிக்குள் வை.
"சுத்தத் தங்கத்தினால் ஒரு கிருபாசனத்தைச் செய்யவேண்டும். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமுமாயிருக்க வேண்டும். அதன் இரு முனைகளிலும் தங்கத்தகட்டால் இரண்டு கேருபீன்களைச் செய்யவேண்டும். ஒரு கேருபீனை ஒரு முனையிலும், இன்னொன்றை மறு முனையிலும் செய்யவேண்டும். கிருபாசனத்தின் இரண்டு முனைகளிலும் கேருபீன்கள் அமையும்படி, ஒரே தகட்டினாலேயே அவற்றைச் செய்யவேண்டும். அந்தக் கேருபீன்களின் சிறகுகள் கிருபாசனத்தை மூடியபடி மேல்நோக்கி விரிந்திருக்க வேண்டும். அந்த கேருபீன்கள் கிருபாசனத்தைப் பார்த்தபடி ஒன்றுக்கொன்று எதிரெதிராக இருக்கவேண்டும். கிருபாசனத்தைப் பெட்டியின்மேல் வை. நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சியத்தை பெட்டிக்குள் வை.
அங்கே கிருபாசனத்தின் மேலும் சாட்சிப்பெட்டியின்மேலும் இருக்கும் இரண்டு கேருபீன்களுக்கிடையில் நான் உன்னைச் சந்தித்து, இஸ்ரயேலருக்கான எல்லா கட்டளைகளையும் உன்னிடம் கொடுப்பேன்.
உடன்படிக்கைப்பெட்டி
அதன்பின் பெசலெயேல் சித்தீம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்தான். அது இரண்டரை முழம் நீளமும், ஒன்றரை முழம் அகலமும், ஒன்றரை முழம் உயரமும் உடையதாயிருந்தது.
இறைசமுகக் கூடாரத்தை அமைத்தல்
பின்பு யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: "நீ சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தை, முதலாம் மாதம், முதலாம் நாளில் நிறுவவேண்டும். அதில் சாட்சிப்பெட்டியை வைத்து அதைத் திரையினால் மறைக்கவேண்டும்.
பின்பு சாட்சிக் கற்பலகைகளை எடுத்து அவற்றைப் பெட்டிக்குள் வைத்தான். பின்பு அதைத் தூக்கும் கம்புகளைப் பெட்டியில் மாட்டி, கிருபாசனத்தைப் பெட்டியின் மேலே வைத்தான். இவ்வாறு மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, பெட்டியை இறைசமுகக் கூடாரத்திற்குள் கொண்டுவந்து, மூடுதிரையைத் தொங்கவிட்டு சாட்சிப்பெட்டியை மறைத்தான்.
மோசே யெகோவாவுடன் பேசுவதற்காகச் சபைக் கூடாரத்திற்குள் சென்றபோது, சாட்சிப்பெட்டியின் மேலுள்ள கிருபாசனத்திற்கு மேலாக இருக்கும், இரண்டு கேருபீன்களுக்கும் இடையில் இருந்து தன்னோடு பேசுகிற குரலைக் கேட்டான். இவ்விதமாக யெகோவா மோசேயோடு பேசினார்.
அப்படியே அவர்கள் யெகோவாவினுடைய மலையை விட்டுப் புறப்பட்டு மூன்று நாட்கள் பயணம் செய்தார்கள். தங்கும் இடம் ஒன்றைக் கண்டுகொள்வதற்காக அந்த மூன்றுநாட்களும் யெகோவாவின் உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு முன்னால் சென்றது. அவர்கள் முகாமைவிட்டுப் புறப்பட்டபோது, பகலில் யெகோவாவின் மேகம் அவர்களுக்கு மேலாக இருந்தது.
உடன்படிக்கைப்பெட்டி புறப்பட்டபோதெல்லாம் மோசே சொன்னது:
"யெகோவாவே, எழுந்தருளும்!
உமது பகைவர் சிதறடிக்கப்படுவார்களாக;
உமது எதிரிகள் உமக்கு முன்பாகப் பயந்து ஓடுவார்களாக."
உடன்படிக்கைப்பெட்டி தங்கும்போதெல்லாம் மோசே சொன்னது:
"யெகோவாவே,
எண்ணிலடங்கா பல்லாயிரக்கணக்கான இஸ்ரயேலரிடம் திரும்பி வாரும்."
ஆரோனின் கோல் துளிர்த்தல்
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, "நீ இஸ்ரயேலரிடம் பேசி, அவர்கள் முற்பிதாக்களின் கோத்திரத் தலைவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு கோலாக, பன்னிரண்டு கோல்களைப் பெற்றுக்கொள். ஒவ்வொருவனுடைய கோலிலும் அவனவன் பெயரை எழுது. லேவி கோத்திரத்தின் கோலில் ஆரோனின் பெயரை எழுது. ஏனெனில், ஒவ்வொரு முற்பிதாக்களின் கோத்திரத் தலைவனுக்கும் கோல் இருக்கவேண்டும். அவற்றை நான் உன்னைச் சந்திக்கும் இடமான சாட்சிப்பெட்டியின் முன்னால் சபைக் கூடாரத்தில் வை. அப்பொழுது நான் தெரிந்தெடுக்கும் மனிதனின் கோல் துளிர்க்கும். இவ்விதம் உனக்கெதிரான இஸ்ரயேலரின் தொடர்ச்சியான இந்த முறுமுறுப்பை நான் என்னை விட்டகற்றுவேன்" என்றார்.
அப்படியே மோசே, இஸ்ரயேலரிடம் சொன்னான். அவர்களின் தலைவர்கள் தங்கள் முற்பிதாக்களின் கோத்திர தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக பன்னிரண்டு கோல்களைக் கொடுத்தார்கள். ஆரோனின் கோலும் அவற்றின் மத்தியில் இருந்தது. மோசே அந்தக் கோல்களை சாட்சிபகரும் கூடாரத்தில் யெகோவா முன்னிலையில் வைத்தான்.
மறுநாள் மோசே சாட்சிபகரும் கூடாரத்திற்குள் வந்தபோது, அங்கே லேவி குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆரோனின் கோல் துளிர்த்தது மட்டுமல்லாமல், மொட்டுவிட்டுப் பூத்து, வாதுமைக் காய்களையும் கொண்டிருந்தது. பின்பு மோசே யெகோவா முன்னிருந்த கோல்களையெல்லாம் எடுத்து வெளியில் இருந்த இஸ்ரயேலர் அனைவரிடமும் கொண்டுவந்தான். அவர்கள் அவற்றைப் பார்த்து, ஒவ்வொருவரும் தன்தன் கோல்களை எடுத்துக்கொண்டார்கள்.
ஆனால் யெகோவா மோசேயிடம், "இக்கலகக்காரருக்கு ஒரு அடையாளமாக வைக்கப்படும்படி ஆரோனின் கோலைத் திரும்பவும் சாட்சிப்பெட்டியின் முன்னேவை. அது எனக்கு விரோதமான அவர்களின் முறுமுறுப்புக்கு ஒரு முடிவை உண்டாக்கும். அதனால் அவர்களும் சாகாதிருப்பார்கள்" என்றார். யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
அப்படியே மக்கள் யோர்தானைக் கடப்பதற்காக முகாமைவிட்டு புறப்பட்டபோது, உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கும் ஆசாரியர்கள் அவர்களுக்கு முன்பாகச் சென்றார்கள். வழக்கம்போல் அறுவடை காலத்தில், யோர்தான் நதி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துசென்ற ஆசாரியர்கள் யோர்தானை அடைந்து அவர்கள் பாதங்கள் தண்ணீரில் பட்டதும், மேல் இருந்து பாய்ந்துவந்த நீர் ஓடாமல் நின்றது. அது வெகுதொலைவில், சரேத்தான் என்னும் இடத்திற்கு அருகிலுள்ள ஆதாம் என்னும் பட்டணத்தில் குவிந்துநின்றது. அதேவேளையில் கீழ்நோக்கி ஓடும் நீர் சவக்கடலுக்குள் வழிந்தோடிப்போயிற்று. இவ்வாறு இஸ்ரயேலர் எரிகோவுக்கு நேரே யோர்தானைக் கடந்து சென்றார்கள். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துசென்ற ஆசாரியர்கள் யோர்தான் நடுவில் வறண்ட நிலத்தில் உறுதியாய்த் தரித்து நின்றனர். இவ்வாறு இஸ்ரயேலர் அனைவரும் வறண்டநிலத்தின் வழியாக நதியைக் கடந்து முடிக்கும்வரை, ஆசாரியர்கள் அங்கேயே நின்றார்கள்.
ஆசாரியர்கள் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு, ஆற்றிலிருந்து கரையேறி வெளியே வந்தார்கள். அவர்களுடைய பாதம் வறண்ட நிலத்தை மிதித்தவுடன் யோர்தானின் தண்ணீர் தங்களிடத்திற்குத் திரும்பி முன்போலவே பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது.
எரிகோ பட்டணம் இஸ்ரயேலர்கள் நிமித்தம் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தது. அதனால் ஒருவரும் பட்டணத்தைவிட்டு வெளியே போகவுமில்லை; உள்ளே வரவுமில்லை.
அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், "இதோ, எரிகோ பட்டணத்தை அதன் அரசனோடும், போர்வீரர்களோடும் உன்னிடம் கையளித்துவிட்டேன். நீ ஆயுதம் தரித்த மனிதர்களோடு அணிவகுத்துப் பட்டணத்தைச்சுற்றி வா. இவ்வாறு ஆறுநாட்கள் செய். உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் ஏழு ஆசாரியர்கள் செம்மறியாட்டுக் கொம்பினால் செய்யப்பட்ட எக்காளங்களை எடுத்துக்கொண்டு செல்லும்படிசெய். ஏழாம்நாளோ நீங்கள் பட்டணத்தைச்சுற்றி ஏழுமுறை அணிவகுத்துச் செல்லுங்கள். அவ்வேளையில் ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதிக்கொண்டு செல்லட்டும். ஆசாரியர்கள் எக்காளங்களில் நீண்டதொனி எழுப்புவதைக் கேட்டவுடன் எல்லா மக்களையும் உரத்த சத்தம் எழுப்பச்சொல். அப்பொழுது பட்டணத்தின் சுற்றுமதில் இடிந்துவிழும். இஸ்ரயேல் மக்கள் பட்டணத்தினுள் செல்லட்டும். ஒவ்வொரு மனிதனும் தான்நின்ற இடத்திலிருந்து நேராக உள்ளே செல்லட்டும்" என்று கூறினார்.
அப்படியே நூனின் மகனாகிய யோசுவா ஆசாரியர்களை அழைத்து, "யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, அதற்கு முன்னே ஏழு ஆசாரியர்களை எக்காளத்துடன் போகும்படி செய்யுங்கள்" எனச் சொன்னான். பின்பு மக்களிடம் அவன், "இப்பொழுது நீங்கள் முன்னேறிச்செல்லுங்கள். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்னே ஆயுதம் தாங்கிய காவலர்கள் அணிவகுத்து பட்டணத்தைச் சுற்றிவாருங்கள்" என உத்தரவிட்டான்.
எக்காளங்கள் தொனித்தபோது மக்கள் சத்தமிட்டனர், எக்காளத் தொனியுடன் மக்கள் பெரும் சத்தமிடும்போது, பட்டணத்தின் சுற்றுமதில்கள் இடிந்து விழுந்தன. அப்பொழுது ஒவ்வொருவரும் தங்களுக்கு நேராக உள்ளே ஏறி பட்டணத்தைக் கைப்பற்றினார்கள்.
பெலிஸ்தியர் இஸ்ரயேலரை எதிர்கொள்ளும்படி தங்கள் படையை அணிவகுத்தார்கள். யுத்தம் பெருத்தபோது இஸ்ரயேலர் பெலிஸ்தியரால் தோற்கடிக்கப்பட்டார்கள். யுத்தகளத்தில் ஏறக்குறைய நாலாயிரம் இஸ்ரயேலரை பெலிஸ்தியர் கொன்றார்கள். இராணுவவீரர் முகாம்களுக்குத் திரும்பியபோது இஸ்ரயேலின் முதியவர்கள், "ஏன் இன்று யெகோவா பெலிஸ்தியருக்குமுன் எங்களைத் தோல்வியடைச் செய்தார்? யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீலோவிலிருந்து கொண்டுவருவோம். அது எங்களுடன் இருந்தால் பகைவரிடமிருந்து அது நம்மைத் தப்புவிக்கும்" என்றார்கள்.
எனவே மக்கள் சீலோவுக்கு ஆட்களை அனுப்பினார்கள். அவர்கள் கேருபீன்களுக்கு நடுவில் அரியணையில் அமர்ந்திருக்கும் சேனைகளின் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள். அங்கே ஏலியின் இரு மகன்களான ஒப்னியும், பினெகாசும் இறைவனுடைய உடன்படிக்கைப் பெட்டியோடு வந்தார்கள்.
யெகோவாவினுடைய உடன்படிக்கைப்பெட்டி முகாமுக்குள் வந்தவுடன் நிலம் அதிரத்தக்கதாக இஸ்ரயேல் மக்கள் பெரிய சத்தமிட்டு ஆர்ப்பரித்தார்கள். இந்தச் சத்தத்தைக் கேட்ட பெலிஸ்தியர், "எபிரெயருடைய முகாமுக்குள் கேட்கும் இந்தக் கூக்குரலுக்குக் காரணமென்ன?" என்று கேட்டார்கள்.
யெகோவாவினுடைய பெட்டி முகாமுக்குள் கொண்டுவரப்பட்டதை அறிந்தபோது, பெலிஸ்தியர் பயமடைந்தார்கள். அப்பொழுது பெலிஸ்தியர், "கடவுள் முகாமுக்குள் வந்துவிட்டார். ஐயோ நமக்கு ஆபத்து! இதற்கு முன்பு ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே. ஐயோ நமக்கு கேடு! இந்த வல்லமையுள்ள கடவுளின் கையிலிருந்து நம்மை விடுவிப்பவர் யார்? இந்த கடவுள் எகிப்தியரை பாலைவனத்தில் எல்லாவித வாதைகளினாலும் தாக்கினார் அல்லவா! பெலிஸ்தியரே, திடன்கொண்டு ஆண்மையுடன் முன்னேறுங்கள். எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாயிருந்ததுபோல, நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாவீர்கள். ஆண்மையுடன் போரிடுங்கள்" என்றார்கள்.
அப்படியே பெலிஸ்தியர் போரிட்டார்கள். இஸ்ரயேலர் முறியடிக்கப்பட்டு அனைவரும் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது; இஸ்ரயேலர் காலாட்படையினரில் முப்பதாயிரம்பேரை இழந்தார்கள். இறைவனின் பெட்டி பெலிஸ்தியரால் கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு மகன்களான ஒப்னியும், பினெகாசும் இறந்தார்கள்.
அஸ்தோத்திலும், அதன் சுற்றுப்புறங்களிலும் இருந்த மக்களின்மேல் யெகோவாவின் கரம் மிகவும் பாரமாயிருந்தது. அவர் அவர்களைக் கட்டிகளினால் வாதித்தார். இவ்வாறு நடப்பதை அஸ்தோத்தின் மக்கள் கண்டபோது அவர்கள், "இஸ்ரயேலின் இறைவனின் பெட்டி எங்களுடன் இங்கே இருக்கக்கூடாது. ஏனெனில் அவருடைய கை நம்மேலும், நம்முடைய தெய்வமாகிய தாகோனின்மேலும் பாரமாய் இருக்கிறது" என்றார்கள். எனவே அவர்கள் பெலிஸ்தியரின் ஆளுநர்களை வரவழைத்து அவர்களிடம், "இஸ்ரயேலின் தெய்வத்தின் பெட்டியை என்ன செய்யலாம்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "இஸ்ரயேலின் தெய்வத்தின் பெட்டியை காத்துக்கு அனுப்பி வையுங்கள்" என்றார்கள். அப்படியே இஸ்ரயேலரின் இறைவனின் பெட்டி கொண்டுபோகப்பட்டது.
ஆனால் அவர்கள் பெட்டியைக் கொண்டுபோன பின்பு, யெகோவாவின் கரம் அப்பட்டணத்திலுள்ளவர்களுக்கு எதிராக வந்ததினால் அங்கு பெரும்பீதி உண்டானது. அவர் அப்பட்டணத்திலுள்ள இளவயதினர் முதல், முதியவர்கள்வரை கட்டியினால் வாதித்தார். இதனால் அவர்கள் இறைவனது பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்.
இறைவனது பெட்டி எக்ரோனுக்குள் போனபோது எக்ரோன் மக்கள் சத்தமிட்டு, "எங்களையும் எங்கள் மக்களையும் கொல்வதற்காகவே இஸ்ரயேலரின் தெய்வத்தின் பெட்டியை எங்களிடம் கொண்டுவந்திருக்கிறார்கள்" என்றார்கள். எனவே அவர்கள் பெலிஸ்தியரின் ஆளுநர்களை வரவழைத்து அவர்களிடம், "இஸ்ரயேல் தெய்வத்தின் பெட்டியை அனுப்பிவிடுங்கள். அது அதனுடைய இடத்திற்கே போகட்டும். இல்லையெனில் அது எங்களையும், எங்கள் மக்களையும் கொன்றுவிடும்" என்றார்கள். ஏனெனில் மரணம் அப்பட்டணத்தை பயத்தால் நிரப்பியிருந்தது. இறைவனின் தண்டனையின் கரம் அதன்மேல் பாரமாயிருந்தது.
பெட்டி இஸ்ரயேலுக்குத் திரும்புதல்
யெகோவாவின் பெட்டி பெலிஸ்தியரின் பிரதேசத்தில் ஏழு மாதங்கள் இருந்தது. பெலிஸ்தியர் தங்கள் பூசாரிகளையும் குறிசொல்பவர்களையும் வரவழைத்து, "யெகோவாவின் பெட்டியை நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை அது இருந்த இடத்திற்கு எப்படி அனுப்பலாமென்று சொல்லுங்கள்" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், "இஸ்ரயேலரின் தெய்வத்தின் பெட்டியை அனுப்புவதாயின் அதை வெறுமையாய் அனுப்பாமல், அதனோடு குற்றநிவாரண காணிக்கையையும் அவருக்கு அனுப்புங்கள். அப்பொழுது நீங்கள் குணமாவீர்கள், அன்றியும் அவருடைய தண்டனையின் கரம் உங்களைவிட்டு நீங்காதிருந்த காரணத்தையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்" என்றார்கள்.
அப்படியே அவர்கள் செய்தார்கள். இரண்டு கறவைப்பசுக்களை கொண்டுவந்து வண்டியில் பூட்டி, அவற்றின் கன்றுக்குட்டிகளைத் தொழுவத்தில் அடைத்து வைத்தார்கள். பின்பு யெகோவாவின் பெட்டியை வண்டியில் வைத்துத் தங்கத்தினால் செய்த எலிகளையும், கட்டி உருவங்களின் மாதிரிகளை வைத்த பெட்டியையும் வைத்தார்கள். அப்பொழுது அந்தப் பசுக்கள் வழிநெடுகிலும் கத்திக்கொண்டே பெத்ஷிமேஷை நோக்கி வலதுபக்கமோ, இடது பக்கமோ திரும்பாமல், நேரே சென்றன. பெலிஸ்தியரின் ஆளுநர்களும் பெத்ஷிமேஷின் எல்லைவரை அவைகளின் பின்னே சென்றார்கள்.
அப்பொழுது பெத்ஷிமேஷின் மக்கள் பள்ளத்தாக்கில் கோதுமை அறுவடை செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் நிமிர்ந்து பார்த்து பெட்டியைக் கண்டபோது, அக்காட்சியால் மகிழ்ச்சி அடைந்தார்கள். வண்டி பெத்ஷிமேஷ் ஊரானான யோசுவா என்பவனது வயலுக்கு வந்ததும் அங்கே ஒரு பெரிய கற்பாறையருகே நின்றது. அந்த மக்கள் வண்டியின் மரத்தை வெட்டி அதைக்கொண்டு அந்த பசுக்களை யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகச் செலுத்தினார்கள். லேவியர் யெகோவாவின் பெட்டியையும் அதனோடு வைக்கப்பட்டிருந்த தங்கப் பொருட்களுள்ள பெட்டியையும் எடுத்து அந்தப் பெரிய பாறைமேல் வைத்தார்கள். பெத்ஷிமேஷின் மக்களும் அன்றையதினம் யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளையும், பலிகளையும் செலுத்தினார்கள்.
எனவே கீரியாத்யாரீம் மக்கள் வந்து யெகோவாவின் பெட்டியை எடுத்துக்கொண்டு போனார்கள். அதைக் குன்றின் மேலுள்ள அபினதாபின் வீட்டிற்குக் கொண்டுபோய் அவன் மகன் எலெயாசாரை யெகோவாவின் பெட்டியைக் காவல் காக்கும்படி அர்ப்பணித்தார்கள்.
பெலிஸ்தியர் மிஸ்பாவில் தோற்கடிக்கப்படுதல்
யெகோவாவின் பெட்டி நெடுங்காலமாக கீரியாத்யாரீமில் வைக்கப்பட்டிருந்தது. அது இருபது வருடங்களாக அங்கே இருந்தது. இஸ்ரயேலர் எல்லோரும் மனம்வருந்தி யெகோவாவைத் தேடினார்கள்.
அப்பொழுது, இறைவனின் பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டில் இருப்பதால், அவனையும், குடும்பத்தாரையும் அவனுக்குள்ள எல்லாவற்றையும் யெகோவா ஆசீர்வதிக்கிறார் என தாவீதுக்குச் சொல்லப்பட்டது. எனவே தாவீது போய் இறைவனின் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தாவீதின் நகரத்திற்குக் கொண்டுவந்தான். யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து வந்தவர்கள் ஆறு அடி எடுத்து வைத்ததும் தாவீது ஒரு மாட்டையும், ஒரு கொழுத்த கன்றையும் அங்கே பலிசெலுத்தினான். அப்பொழுது தாவீது நார்ப்பட்டு ஏபோத்தை அணிந்துகொண்டு யெகோவாவுக்கு முன்பாகத் தன் முழு பலத்தோடும் நடனமாடினான். தாவீதும் இஸ்ரயேல் குடும்பத்தார் யாவரும் ஆரவாரத்தோடும், எக்காள சத்தத்தோடும் யெகோவாவின் பெட்டியைக் கொண்டுவந்தார்கள்.
ஆலயத்தில் உடன்படிக்கைப்பெட்டி
சாலொமோன் அரசன் தாவீதின் பட்டணமான சீயோனிலிருந்து யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலின் முதியவர்களையும், எல்லா கோத்திரத் தலைவர்களையும், இஸ்ரயேல் குடும்பத் தலைவர்களையும் எருசலேமில் ஒன்றுகூடும்படி தன்னிடம் வரவழைத்தான். ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதம் பண்டிகைக் காலத்தில் இஸ்ரயேல் மனிதர் யாவரும் சாலொமோன் அரசனிடம் ஒன்றுகூடி வந்தார்கள்.
இஸ்ரயேலின் முதியவர்கள் எல்லோரும் வந்துசேர்ந்ததும் ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கினார்கள். அவர்கள் யெகோவாவின் பெட்டியையும், சபைக் கூடாரத்தையும், அதனுள்ளிருந்த பரிசுத்த பொருட்களையும் தூக்கிக்கொண்டு வந்தனர். ஆசாரியரும் லேவியரும் அதைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். அரசன் சாலொமோனும் பெட்டிக்கு முன்னால் அவனோடே கூடிநின்ற இஸ்ரயேலின் முழுசபையும் உடன்படிக்கைப் பெட்டியின்முன் வந்து, அநேக செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் பலியிட்டனர். அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடவோ குறித்துவைக்கவோ அவர்களால் முடியவில்லை.
அதன்பின் ஆசாரியர்கள் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்து, ஆலயத்தின் உட்புற பரிசுத்த இடமான மகா பரிசுத்த இடத்துக்குக் கொண்டுபோய், அங்கிருந்த கேருபீன்களின் செட்டைகளின்கீழ் வைத்தார்கள். விரிக்கப்பட்ட கேருபீன்களின் சிறகுகள் உடன்படிக்கைப் பெட்டிக்கும் அதைத் தூக்கும் கம்புகளுக்கும் மேலாக நிழலிட்டுக் கொண்டிருந்தன. இந்தக் கம்புகள் மிகவும் நீளமாயிருந்தன. அவற்றின் நுனிகள் பரிசுத்த இடத்திற்கு முன்பாக மகா பரிசுத்த இடத்திலிருந்து பார்க்கக்கூடியதாயிருந்து. ஆனால் பரிசுத்த இடத்திற்கு வெளியிலிருந்து பார்க்கும்போது அவை தெரியப்படவில்லை. இன்றுவரை அவ்வாறே இருக்கின்றன. அந்தப் பெட்டிக்குள் ஓரேப் மலையில் மோசே வைத்த இரண்டு கற்பலகைகளைத்தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அங்குதான் இஸ்ரயேலர் எகிப்தைவிட்டு வந்தபின்பு யெகோவா அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்திருந்தார்.
ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தைவிட்டு வெளியே வந்தபோது, யெகோவாவின் ஆலயத்தை மேகம் நிரப்பியது. அந்த மேகத்தின் நிமித்தம் ஆசாரியர்கள் தாங்கள் செய்யவேண்டிய பணிகளைச் செய்யமுடியாமல் இருந்தார்கள். ஏனெனில் யெகோவாவின் மகிமை அவருடைய ஆலயத்தை நிரப்பியது.
"பின்மாற்றமடைந்த மக்களே! திரும்பிவாருங்கள்" என்று யெகோவா அறிவிக்கிறார். "ஏனெனில் நானே உங்கள் கணவன். நான் உங்களை ஒரு பட்டணத்திலிருந்து ஒருவனாகவும், ஒரு வம்சத்திலிருந்து இருவராகவும் தெரிந்தெடுத்து, உங்களைச் சீயோனுக்குக் கொண்டுவருவேன். என் இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களை உங்களுக்குத் தருவேன். அவர்கள் அறிவோடும், விவேகத்தோடும் உங்களை வழிநடத்துவார்கள். அந்நாட்களில் நாட்டில் உங்கள் எண்ணிக்கை மிகுதியாய் பெருகியிருக்கும்" என்று யெகோவா அறிவிக்கிறார். அப்பொழுது மனிதர்கள், யெகோவாவினுடைய உடன்படிக்கைப் பெட்டியைப்பற்றி ஒருபோதும் பேசமாட்டார்கள். அதைப்பற்றி ஒருபோதும் அவர்கள் எண்ணுவதோ நினைப்பதோ இல்லை; அதைக் குறித்த மனவருத்தமும் அவர்களுக்கு ஏற்படாது. அதுபோல வேறொன்று செய்யப்படுவதும் இல்லை.
இவ்வுலகிற்குரிய கூடாரத்தில் வழிபாடு
முதலாம் உடன்படிக்கைக்கென வழிபாட்டு முறைமைகளும் இவ்வுலகிற்குரிய ஒரு பரிசுத்த இடமும் இருந்தன. அதற்குள் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பகுதி பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்டது. அதினுள்ளேயே குத்துவிளக்கும், மேஜையும், அதன்மீது படைக்கப்பட்ட அப்பங்களும் இருந்தன. அந்த இரண்டாவது திரைக்குப் பின்னால் மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்ட ஒரு இடம் இருந்தது. அங்கே தங்கத்தால் செய்யப்பட்ட தூபபீடமும், தங்கத்தால் மூடப்பட்ட உடன்படிக்கைப் பெட்டகமும் இருந்தன; இந்தப் பெட்டகத்தினுள்ளே, மன்னா உணவு வைக்கப்பட்ட தங்கச் சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. அந்த பெட்டகத்தின் மேலாக மகிமையின் கேரூபீன்கள் கிருபாசனத்தை நிழலிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இவை எல்லாவற்றையும், விரிவாய் சொல்ல இப்பொழுது இயலாது.
பின்பு பரலோகத்திலுள்ள, இறைவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது; அப்போது அவருடைய ஆலயத்திலுள்ள அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது. அவ்வேளையில் மின்னல்களும், பேரிரைச்சல்களும், இடிமுழக்கத்தின் சத்தங்களும், பூமியதிர்ச்சியும், பெரிய கல்மழையும் ஏற்பட்டன.