10 அந்த மனிதர்கள் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டு வந்து, அவைகளை வண்டியிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து, 11 யெகோவாவுடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சிலைகளும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டியின்மேல் வைத்தார்கள். 12 அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியில் செவ்வையாகப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கத்திக்கொண்டே நடந்தது; பெலிஸ்தர்களின் ஆளுனர்கள் பெத்ஷிமேசின் எல்லைவரை அவைகளின் பின்னாகவே போனார்கள். 13 பெத்ஷிமேசின் மனிதர்கள் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களினால் ஏறெடுத்துப்பார்க்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள். 14 அந்த வண்டி பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல் இருந்தது; அப்பொழுது வண்டியின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் யெகோவாவுக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள். 15 லேவியர்கள் யெகோவாவுடைய பெட்டியையும், அதனோடு இருந்த பொன் உருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனிதர்கள், அன்றையதினம் யெகோவாவுக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்திப் பலிகளையிட்டார்கள்.
Publicidade