பாபிலோனில் தானியேலுக்குப் பயிற்சி
1 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் ஆட்சிசெய்த மூன்றாம் வருடத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்து, அதை முற்றுகையிட்டான். 2 அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவனுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தெய்வத்தின் கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தெய்வத்தின் கருவூலத்திற்குள் வைத்தான். 3 அப்பொழுது இஸ்ரவேல் மக்களுக்குள்ளே ராஜவம்சத்தார்களிலும் உயர்குடிமக்களிலும் எந்தவொரு குறைபாடும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணர்களும், ராஜாவின் அரண்மனையிலே வேலைசெய்யத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபர்களைக் கொண்டுவரவும், 4 அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் மொழியையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் அதிகாரிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்கு கட்டளையிட்டான். 5 ராஜா, தான் சாப்பிடும் உணவிலேயும் தான் குடிக்கும் திராட்சைரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருடங்கள் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவிற்கு முன்பாக நிற்கும்படிசெய்யவும் கட்டளையிட்டான். 6 அவர்களுக்குள் யூதா மக்களாகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள்.