35 அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய மகள் மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறாய் என்றார்கள். 36 அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெப ஆலயத்தலைவனைப் பார்த்து: பயப்படாதே, விசுவாசம் உள்ளவனாக இரு என்று சொல்லி; 37 வேறுயாரையும் தம்மோடு சேர்த்துக்கொள்ளாமல், பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோனார்; 38 ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிற்கு வந்து, அங்கே சத்தமிடுகிற மக்களையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு, 39 உள்ளே சென்று: நீங்கள் சத்தமிட்டு அழுகிறது ஏன்? பிள்ளை மரிக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். 40 அதற்காக அவரைப் பார்த்து சிரித்தார்கள். எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடு வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளை இருந்த அறைக்குள் சென்று, 41 பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு; சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தம். 42 உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாக இருந்தாள். அவர்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். 43 அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்குச் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுங்கள் என்று சொன்னார்.