சீரோபேனிக்கியா தேசத்துப் பெண்
24 பின்பு, அவர் எழுந்து அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில்போய், ஒரு வீட்டிற்குள் சென்று, அவர் அங்கே இருப்பது ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பியும், அவர் மறைவாக இருக்கமுடியாமல்போனது. 25 அசுத்தஆவி பிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாய், இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள். 26 அந்தப் பெண் சீரோபேனிக்கியா தேசத்தைச் சேர்ந்த கிரேக்கப் பெண்ணாக இருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டாள். 27 இயேசு அவளைப் பார்த்து: முதலில் பிள்ளைகள் திருப்தியாகட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லது இல்லை என்றார். 28 அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும், மேஜையின்கீழே இருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். 29 அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளைவிட்டுப் போனது என்றார். 30 அவள் தன் வீட்டிற்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.