பெத்சாயிதாவில் குருடன் சுகமாக்கப்படுதல்
22 பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து, அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். 23 அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கரங்களை வைத்து: எதையாவது பார்க்கிறாயா? என்று கேட்டார். 24 அவன் பார்த்து: மனிதர்களை நடக்கிற மரங்களைப்போலப் பார்க்கிறேன் என்றான். 25 பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கரங்களை வைத்து, அவனைப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் பார்வைப்பெற்று, எல்லோரையும் தெளிவாகப் பார்த்தான். 26 பின்பு அவர் அவனைப் பார்த்து: நீ கிராமத்திற்குள் செல்லாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.