எலிசாவின் இரண்டு அற்புதங்கள்
19 அந்தப் பட்டணத்து மனிதர் எலிசாவைப் பார்த்து, "ஆண்டவனாகிய நீர் காண்கிறபடி உண்மையாக இந்தப் பட்டணம் சிறந்த சூழலில் அமைந்துள்ளது. ஆனால் தண்ணீரோ பயன்படுத்த உகந்ததல்ல. அத்துடன் நிலமும் பலனற்றதாயிருக்கிறது" என்றார்கள்.
20 அப்பொழுது அவன், "என்னிடம் ஒரு புதிய பாத்திரத்தைக் கொண்டுவந்து அதில் சிறிது உப்புப் போடுங்கள்" என்றான். அப்படியே அதை அவர்கள் அவனிடம் கொண்டுவந்தார்கள்.
21 அவன் நீரூற்றண்டைக்குப் போய் அதற்குள்ளே உப்பை வீசி, "யெகோவா சொல்வது இதுவே: ‘நான் இந்தத் தண்ணீரை சுத்தமாக்கியிருக்கிறேன். இனிமேல் இது மரணத்தை உண்டாக்கவோ, நிலத்தைப் பலனற்றதாக்கவோமாட்டாது’ என்கிறார்" என்றான். 22 எலிசா சொன்ன வார்த்தையின்படி அந்தத் தண்ணீர் இன்றுவரை தூய்மையாகவே இருக்கிறது.