விதவையின் எண்ணெய்
1 ஒரு நாள் இறைவாக்கினர் கூட்டத்திலுள்ள ஒருவனின் மனைவி எலிசாவை நோக்கி, "உமது அடியானான எனது கணவன் இறந்துவிட்டார். அவர் யெகோவாவிடத்தில் பயபக்தியாய் இருந்தார் என்பது உமக்குத் தெரியும். இப்போது அவருடைய கடன்காரன் என்னுடைய இரு மகன்களையும் தனக்கு அடிமைகளாக்குவதற்கு கூட்டிக்கொண்டுபோக வந்திருக்கிறான்" என்றாள்.
2 அப்பொழுது எலிசா அவளைப் பார்த்து, "நான் உனக்கு எப்படி உதவிசெய்யலாம்? வீட்டில் உன்னிடம் என்ன உண்டு? எனக்குச் சொல்" என்று கேட்டான்.
அதற்கு அவள், "ஒரு ஜாடி எண்ணெயைத் தவிர உமது அடியவளின் வீட்டில் வேறு ஒன்றுமே இல்லை" என்று கூறினாள்.
3 அப்பொழுது எலிசா, "நீ போய் உன் அயல் வீட்டுக்காரர் எல்லாரிடமிருந்தும் வெறும் ஜாடிகளைக் கேட்டு வாங்கு. அதிகளவு ஜாடிகளைக் கேட்டு வாங்கு. 4 அதன்பின் நீயும் உன் மகன்களும் வீட்டின் உள்ளே போய், கதவைப் பூட்டிக்கொள்ளுங்கள். பின்பு எண்ணெயை எல்லா ஜாடிகளிலும் ஊற்றுங்கள். ஒவ்வொன்றும் நிரம்பியவுடன், ஒரு பக்கத்தில் அவற்றை எடுத்துவையுங்கள்" என்றான்.
5 அவள் அவனிடமிருந்து போய், மகன்களுடன் வீட்டினுள்ளே போய் கதவைப் பூட்டினாள். அவளுடைய மகன்கள் ஜாடிகளைக் கொடுக்கக் கொடுக்க அவள் எண்ணெயை ஊற்றிக்கொண்டேயிருந்தாள். 6 எல்லா ஜாடிகளும் நிரம்பியபோது, அவள் தன் மகனைப் பார்த்து, "மற்றொரு ஜாடி கொண்டுவா" என்றாள்.
"இனிமேல் வேறு ஜாடி இல்லை" என்று அவன் கூறியபோது எண்ணெய் நின்றுவிட்டது.
7 அவள் போய் இறைவனுடைய மனிதனிடம் அதைக்கூறியபோது அவன் அவளிடம், "நீ போய் அந்த எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்திடு. நீயும் உன் மகன்களும் மீதியாயிருப்பதைக் கொண்டு வாழலாம்" என்றான்.