தொலைந்த கோடரி மிதத்தல்
1 இறைவாக்கினர் கூட்டம் எலிசாவிடம், "பாரும், உம்மோடுகூட நாங்கள் குடியிருக்கும் இந்த இடம் மிகவும் சிறியதாய் இருக்கிறது. 2 நாங்கள் யோர்தானுக்குப் போய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மரங்களை வெட்டி, குடியிருப்பதற்கு ஒரு வசிப்பிடத்தைக் கட்டுவோம்" என்றார்கள்.
அப்பொழுது எலிசா, "போங்கள்" என்றான்.
3 அவர்களில் ஒருவன் எலிசாவிடம், "உமது அடியவர்களுடன் நீரும் வரமாட்டீரோ?" என்று கேட்டான்.
எலிசா அதற்கு, "நான் வருவேன்" என்று கூறினான். 4 அவன் அவர்களுடன் கூடப்போனான்.
அவர்கள் யோர்தானுக்குப் போய் மரங்களை வெட்டத்தொடங்கினார்கள். 5 அவர்களில் ஒருவன் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருக்கும்போது, அவனின் இரும்புக் கோடரி, பிடி கழன்று தண்ணீருக்குள் விழுந்தது. அப்பொழுது அவன், "ஐயா, என் தலைவனே! அது இரவலாக வாங்கப்பட்டதே" என்றான்.
6 அதற்கு இறைவனுடைய மனிதன், "அது எங்கே விழுந்தது?" என்று கேட்டான். அவன் அந்த இடத்தைக் காட்டியபோது எலிசா ஒரு கொம்பை வெட்டி அங்கே எறிந்து அந்த இரும்பை மிதக்கச் செய்தான். 7 "அதை வெளியே எடு" என்று எலிசா கூற அவன் தன் கையை நீட்டி அதை எடுத்தான்.