ஈசாக்கும் அபிமெலேக்கும்
1 ஆபிரகாம் காலத்திலிருந்த பஞ்சத்தைவிட நாட்டில் இன்னுமொரு பஞ்சம் உண்டானது. அதனால் ஈசாக்கு கேராரிலுள்ள பெலிஸ்திய அரசனான அபிமெலேக்கிடம் போனான். 2 அப்பொழுது யெகோவா ஈசாக்கிற்குத் தோன்றி, "நீ எகிப்திற்குப் போகவேண்டாம்; நான் உன்னைக் குடியிருக்கச் சொல்லும் நாட்டில் குடியிரு. 3 சிறிதுகாலம் இந்நாட்டில் தங்கியிரு, நான் உன்னுடன் இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். இந்த நாடுகள் எல்லாவற்றையும் உனக்கும் உன் சந்ததிக்கும் தந்து, நான் உன் தகப்பன் ஆபிரகாமுக்கு ஆணையிட்டுக்கொடுத்த சத்தியத்தை உறுதிப்படுத்துவேன். 4 நான் உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போல் பெருகப்பண்ணி, இந்நாடுகள் எல்லாவற்றையும் அவர்களுக்குக் கொடுப்பேன். உன் சந்ததியின் மூலமாக பூமியில் உள்ள எல்லா நாடுகளும் ஆசீர்வதிக்கப்படும். 5 ஏனெனில், ஆபிரகாம் எனக்குக் கீழ்ப்படிந்து, நான் ஒப்படைத்தவற்றையும், கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்ட விதிகளையும் நிறைவேற்றினான்" என்றார். 6 இதனால் ஈசாக்கு கேராரிலே தங்கியிருந்தான்.
7 அவ்விடத்து மனிதர் அவனுடைய மனைவியைப் பற்றி யாரென்று விசாரித்தபோது, அவளைத், "தன் மனைவி" என்று சொல்லப் பயந்ததினால், "தன் சகோதரி" என்று சொன்னான். ஏனெனில், "ரெபெக்காள் மிகவும் அழகுள்ளவளாய் இருந்தபடியால், அவ்விடத்து மனிதர் அவளை அபகரிப்பதற்காகத் தன்னைக் கொன்றுவிடுவார்கள்" என்று அவன் நினைத்தான்.
8 ஈசாக்கு நீண்டநாட்களாய் அங்கே குடியிருக்கையில், பெலிஸ்திய அரசன் அபிமெலேக்கு ஒரு நாள் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, ஈசாக்கு தன் மனைவி ரெபெக்காளோடே தழுவிக் கொண்டிருப்பதைக் கண்டான்.