பேதுரு இயேசுவை மறுதலித்தல்
54 அவர்கள் இயேசுவைப் பிடித்து, பிரதான ஆசாரியன் வீட்டிற்குக் கொண்டுசென்றார்கள். பேதுரு சிறிது தூரத்தில் பின்தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான். 55 அந்த வீட்டு முற்றத்தின் நடுவில் சிலர் நெருப்புமூட்டி, அதன் அருகே ஒன்றாய் உட்கார்ந்தார்கள். அப்போது பேதுருவும் அவர்களுடன் உட்கார்ந்திருந்தான். 56 பேதுரு அங்கே உட்கார்ந்திருப்பதை, ஒரு வேலைக்காரப் பெண் நெருப்பு வெளிச்சத்திலே கண்டாள். அவள் அவனை உற்றுப்பார்த்து, "இவன் இயேசுவோடு இருந்தான்" என்றாள்.
57 ஆனால் பேதுருவோ, "பெண்ணே, அவரை எனக்குத் தெரியாது" என்று மறுதலித்தான்.
58 சிறிது நேரத்திற்குப் பின்பு, வேறொருவன் பேதுருவைக் கண்டு, "நீயும் அவர்களில் ஒருவன் தான்" என்றான்.
அதற்குப் பேதுரு, "இல்லையப்பா, நான் அல்ல" என்றான்.
59 ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப் பின்பு இன்னொருவன், "நிச்சயமாகவே, இவனும் இயேசுவுடனே இருந்தான். ஏனெனில் இவன் கலிலேயன்" என்றான்.
60 அதற்குப் பேதுரு, "மனிதனே நீ என்னப் பேசுகிறாய் என்றே எனக்குத் தெரியாது" என்றான். அவன் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கையில், சேவல் கூவிற்று. 61 அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நேருக்கு நேராய் பார்த்தார். உடனே, "இன்று சேவல் கூவுவதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்" என்று கர்த்தர் சொன்ன வார்த்தை, பேதுருவுக்கு ஞாபகம் வந்தது. 62 அவன் வெளியே போய் மனங்கசந்து அழுதான்.