31 பின்னும் கர்த்தர் சொன்னது, "இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இந்த மக்களை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அவர்கள் யாரைப்போல் இருக்கிறார்கள்? 32 அவர்கள் சந்தைகூடும் இடங்களில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் கூப்பிட்டு,
" ‘நாங்கள் உங்களுக்காகப் புல்லாங்குழல் ஊதினோம்,
நீங்கள் நடனமாடவில்லை;
நாங்கள் ஒப்பாரி பாடினோம்,
நீங்கள் அழவில்லை,’
என்று சொல்கிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
33 யோவான் ஸ்நானகன் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், திராட்சை இரசம் குடிக்காதவனுமாக வந்தான். நீங்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறீர்கள். 34 மானிடமகனோ விருந்து உணவைச் சாப்பிடுகிறவராகவும், குடிக்கிறவராகவும் வந்தார். நீங்களோ, ‘இவனோ உணவுப்பிரியன், மதுபானப்பிரியன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கிறீர்கள். 35 ஆனால் ஞானம் சரியானது என்று அதை ஏற்று நடக்கிறவர்களின் செயல்களாலேதான் அது நிரூபிக்கப்படுகிறது" என்றார்.
பாவியான பெண் இயேசுவுக்கு பரிமளதைலம் பூசுதல்
36 பரிசேயரில் ஒருவன் தன்னுடன் விருந்து சாப்பிடும்படி இயேசுவை அழைத்திருந்தான். எனவே இயேசு பரிசேயனுடைய வீட்டிற்குப்போய் பந்தியில் உட்கார்ந்திருந்தார். 37 அந்தப் பட்டணத்தில் பாவியாகிய ஒரு பெண் இருந்தாள். இயேசு அந்தப் பரிசேயனுடைய வீட்டில் விருந்து சாப்பிடுகிறார் என்று அவள் கேள்விப்பட்டு, விலை உயர்ந்த நறுமணத்தைலம் உள்ள, வெள்ளைக்கல் குடுவையுடன் அங்கு வந்தாள்.