Publicidade

Amós 6

கவலையற்றிருப்பவர்களுக்கு ஐயோ

1 சீயோனிலே கவலையற்றிருப்பவர்களும் சமாரியாவின் மலையை நம்பிக்கொண்டிருக்கிறவர்களும், தேசத்தின் தலைமையென்னப்பட்டு, இஸ்ரவேல் வம்சத்தார் தேடிவருகிறவர்களுமாகிய உங்களுக்கு ஐயோ, 2 நீங்கள் கல்னேவரை சென்று, அந்த இடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்திற்குப்போய், பெலிஸ்தர்களுடைய காத் பட்டணத்திற்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்ஜியங்களைவிட நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்களுடைய எல்லைகளைவிட விரிவான இடமானவைகளோ என்றும் பாருங்கள். 3 தீங்குநாள் தூரமென்று எண்ணிக் கொடுமையின் இருக்கை கிட்டவரும்படிச் செய்து, 4 தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் சவுக்கியமாகப் படுத்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று, 5 தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, 6 பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த வாசனைத்தைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்பிற்கு நேரிட்ட ஆபத்திற்குக் கவலைப்படாமல் போகிறார்கள். 7 ஆகையால் அவர்கள் சிறையிருப்பிற்குப் போகிறவர்களின் முதல் வரிசையிலே போவார்கள்; இப்படியே உல்லாசமாகப் படுத்தவர்களின் விருந்து கொண்டாடல் நின்றுபோகும்.

இஸ்ரவேலின் பெருமையை தேவன் வெறுத்தல்

8 நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, அவனுடைய அரண்மனைகளைப் பகைக்கிறேன்; நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்துவிடுவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சேனைகளின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார். 9 ஒரு வீட்டிலே பத்துப்பேர் மீதியாக இருந்தாலும் அவர்கள் செத்துப்போவார்கள். 10 அவர்களுடைய இனத்தானாவது பிரேதத்தை எறிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகும்படி, அவைகளை எடுத்து, வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராவது உண்டோ என்று கேட்பான், அவன் இல்லை என்பான்; அப்பொழுது இவன்: நீ மௌனமாக இரு; யெகோவாவுடைய நாமத்தைச் சொல்லக்கூடாது என்பான். 11 இதோ, யெகோவா கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை விரிசல்கள் உண்டாகவும் அடிப்பார். 12 கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை விஷமாகவும், நீதியின் கனியைக் கசப்பாகவும் மாற்றினீர்கள். 13 நாங்கள் எங்களுடைய லோதேபார் பட்டணத்தினாலே எங்களுக்குக் கர்னாயிம் பட்டணத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லையோ என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறார்கள். 14 இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, நான் ஒரு தேசத்தை உங்களுக்கு விரோதமாக எழுப்புவேன்; அவர்கள் ஆமாத்துக்குள் நுழைகிற வழி தொடங்கிச் சமமான நாட்டின் ஆறுவரைக்கும் உங்களை ஒடுக்குவார்கள் என்று சேனைகளின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.

Veja também

Publicidade
Amós
Ver todos os capítulos de Amós
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_06-50-08-