Publicidade

Eclesiastes 9

எல்லோருக்கும் ஒரே முடிவு

1 இவை எல்லாவற்றையும் நான் என்னுடைய மனதிலே வகையறுக்கும்படிச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும், தங்களுடைய செயல்களுடன், தேவனுடைய கையில் இருக்கிறார்கள்; தனக்குமுன்பு இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது, வெறுப்பையாவது அறியமாட்டான். 2 எல்லோருக்கும் எல்லாம் ஒரேவிதமாக நடக்கும்; நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், நல்லகுணமும் சுத்தமும் உள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாக நடக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாக நடக்கும். 3 எல்லோருக்கும் ஒரேவிதமாக நடக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீமை ஆகும்; ஆதலால் மனுமக்களின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாள்வரை அவர்களுடைய இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் மரித்து, இறந்தவர்களிடத்திற்குப் போகிறார்கள். 4 இதற்கு நீங்கலாக இருக்கிறவன் யார்? உயிரோடு இருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கை உண்டு; செத்த சிங்கத்தைவிட உயிருள்ள நாய் சிறப்பானது. 5 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் இறப்பதை அறிவார்களே, இறந்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பெயர்கூட மறக்கப்பட்டிருக்கிறது. 6 அவர்களுடைய அன்பும், அவர்களுடைய பகையும், அவர்களுடைய பொறாமையும் ஒழிந்துபோனது; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறது ஒன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கு இல்லை. 7 நீ போய், உன்னுடைய ஆகாரத்தை சந்தோஷத்துடன் சாப்பிட்டு, உன்னுடைய திராட்சைரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன்னுடைய செயல்களை அங்கீகாரம் செய்திருக்கிறார். 8 உன்னுடைய ஆடைகளை எப்பொழுதும் வெள்ளையாகவும், உன்னுடைய தலைக்கு எண்ணெய் குறையாததாகவும் இருப்பதாக. 9 சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடு நிலையில்லாத இந்த வாழ்வை அனுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே செய்கிற பிரயாசத்திலும் பங்கு இதுவே. 10 செய்யும்படி உன்னுடைய கைக்கு நேரிடுவது எதுவோ, அதை உன்னுடைய பெலத்தோடு செய்; நீ போகிற பாதாளத்திலே செயல்களும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. 11 நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே பார்த்தது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்திற்கு வீரர்களின் வீரம் போதாது; பிழைப்பிற்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு அறிவில் தேறினவர்களின் அறிவும் போதாது; அவர்கள் எல்லோருக்கும் நேரமும் தேவச்செயலும் நேரிடவேண்டும். 12 தன்னுடைய காலத்தை மனிதன் அறியான்; மீன்கள் மரண வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுமக்கள் பொல்லாத காலத்திலே திடீரென தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

மதியீனத்தைவிட ஞானமே சிறந்தது

13 சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் பார்த்தேன்; அது என்னுடைய பார்வைக்குப் பெரிதாகத் தோன்றினது. 14 ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே கொஞ்ச மனிதர்கள் இருந்தார்கள்; அதற்கு எதிராக ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய முற்றுகைச் சுவரைக் கட்டினான். 15 அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன்னுடைய ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை. 16 ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைசெய்யப்பட்டு, அவனுடைய வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைவிட ஞானமே உத்தமம் என்றேன். 17 மூடர்களை ஆளும் அதிபதியின் கூக்குரலைவிட ஞானிகளுடைய அமைதியான வார்த்தைகளே கேட்கப்படக்கூடியவைகள். 18 யுத்த ஆயுதங்களைவிட ஞானமே நலம்; பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.

Veja também

Publicidade
Eclesiastes
Ver todos os capítulos de Eclesiastes
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_18-40-07-