Publicidade

Hebreus 4

தேவ பிள்ளைகளுக்கு இளைப்பாறுதல்

1 ஆகவே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்குத் தகுந்த வாக்குத்தத்தம் நமக்கு உண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாக இல்லாமலிருக்கக் கவனமாக இருப்போம். 2 ஏனென்றால், நற்செய்தி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசம் இல்லாமல் கேட்டதினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கவில்லை. 3 விசுவாசித்த நாமோ அந்த இளைப்பாறுதலில் நுழைகிறோம்; விசுவாசியாதவர்களைக் குறித்து தேவன்‌: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். அவருடைய செயல்கள் உலகம் தோன்றிய காலத்திலேயே முடிந்திருந்தும் இப்படிச் சொன்னார். 4 ஏனென்றால், தேவன் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம்நாளைக்குறித்து ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். 5 அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார். 6 எனவே, சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாக இருக்கிறதினாலும், நற்செய்தியை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாததினாலே அதில் நுழையாமல்போனதினாலும், 7 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் என்று நீண்டகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். 8 யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குள் நடத்தியிருந்தால், பின்பு அவர் மற்றொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே. 9 எனவே, தேவனுடைய மக்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாக இருக்கிறது. 10 ஏனென்றால், அவருடைய இளைப்பாறுதலில் நுழைந்தவன், தேவன் தம்முடைய செயல்களை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் செயல்களை முடித்து ஓய்ந்திருப்பான். 11 எனவே, இந்த மாதிரியின்படி ஒருவனும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாமல் இருக்க, நாம் இந்த இளைப்பாறுதலில் நுழைய கவனமாக இருப்போம். 12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது. 13 அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

இயேசு மகா பிரதான ஆசாரியர்

14 வானங்களின்வழியாகப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறதினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம். 15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதாபப்படமுடியாத பிரதான ஆசாரியர் நமக்கு இல்லாமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவம் இல்லாதவராக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார். 16 எனவே, நாம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும், சரியான நேரத்தில் உதவிசெய்யும் கிருபையை அடையவும், தைரியமாகக் கிருபையின் சிங்காசனத்திடம் சேருவோம்.

Veja também

Publicidade
Hebreus
Ver todos os capítulos de Hebreus
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-