Publicidade

1 Timóteo 6

1 அடிமைத்தன நுகத்துக்குக் கீழ்ப்பட்ட எல்லோரும் தங்கள் எஜமான்களை முழு மதிப்புக்குரியவர்களாக எண்ணவேண்டும். அப்பொழுதே நமது இறைவனின் பெயருக்கும், எங்கள் போதித்தலுக்கும் அவதூறு ஏற்படாது. 2 விசுவாசிகளான எஜமான்களின்கீழ் இருக்கும் அடிமைகளும் தங்கள் எஜமான்கள் சகோதரர்களானபடியால், அவர்களுக்குக் குறைவான மதிப்பைக் கொடுக்கக்கூடாது. மாறாக தங்கள் பணியினால் இலாபம் பெறுபவர்கள், விசுவாசிகளும் தங்களுக்கு அன்பானவர்களுமாய் இருப்பதனால், அவர்கள் இன்னும் சிறப்பாய் பணிசெய்ய வேண்டும்.

நீ அவர்களுக்கு போதித்து, வற்புறுத்திக் கூறவேண்டிய காரியங்கள் இவையே.

கள்ளப் போதகர்களும் பண ஆசையும்

3 யாராவது தவறான கோட்பாடுகளை போதிக்கிறவனாகவும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நலமான அறிவுறுத்தல்களுக்கும், இறை பக்திக்கு உகந்த போதித்தலுக்கும் உடன்படாதவனாகவும் இருந்தால், 4 அவன் ஆணவம் உள்ளவனும், ஒன்றும் புரியாதவனாய் இருக்கிறான். அவன் எரிச்சல், சண்டை, அவதூறான பேச்சுகள், தீமையான சந்தேகங்கள் ஆகியவற்றை உண்டாக்கும் வார்த்தைகளைக் கொண்ட சண்டை சச்சரவுகளிலும், எதிர்வாதம் செய்வதிலும் மிதமிஞ்சிய விருப்பம் கொண்டவன். 5 அத்துடன், சீர்கெட்ட மனங்கொண்ட மனிதருக்கிடையில் உண்டாகும் முரண்பாடான பேச்சுகளிலும் அவனுக்கு விருப்பமுண்டு. இம்மனிதரோ சத்தியத்தை இழந்துபோனவர்களாய், இறை பக்தியை பணம் சம்பாதிக்கும் இலாபத்திற்கான ஒரு வழி என எண்ணுகிறார்கள்.

6 ஆனால் மனத்திருப்தியுடன் உள்ள இறை பக்தியே பெரும் இலாபம். 7 ஏனெனில், நாம் இந்த உலகத்திற்கு ஒன்றையும் கொண்டுவரவுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றையும் கொண்டுபோவதுமில்லை. 8 ஆனால் நமக்கு உணவும் உடையும் இருந்தால், நாம் அதில் மனதிருப்தி உள்ளவர்களாக இருப்போம். 9 செல்வந்தர்களாக இருக்க விரும்பும் மக்களோ, சோதனைக்குள்ளும் கண்ணிக்குள்ளும் விழுவதோடு, மூடத்தனமான கேடு விளைவிக்கும் அநேக ஆசைகளுக்குள்ளும் விழுகிறார்கள்; இவை மனிதரைப் பாழாக்கும் அழிவுக்குள் அமிழ்த்துகின்றன. 10 ஏனெனில் பணத்தில் ஆசைகொள்வதே எல்லா வகையான தீமைகளுக்கும் ஆணிவேராய் இருக்கிறது. சிலர் பணத்தில் ஆசைக் கொண்டவர்களாய், விசுவாசத்தைவிட்டு விலகிப்போய், அநேக துன்பங்களினால் தங்களைத் தாங்களே துன்புறுத்திக்கொண்டார்கள்.

தீமோத்தேயுவுக்குப் பவுலின் கட்டளை

11 ஆனால், இறைவனுடைய மனிதனே, நீயோ இவை எல்லாவற்றையும் விட்டுத் தப்பி ஓடி நீதி, இறை பக்தி, விசுவாசம், அன்பு, சகிப்புத்தன்மை, சாந்தம் ஆகியவற்றை நாடித்தேடு. 12 விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு. நித்திய வாழ்வைப் பற்றிக்கொள். இதற்காகவே நீ அழைக்கப்பட்டு, அநேக சாட்சிகளின் முன்னால், உன் விசுவாசத்தைக்குறித்து நல்ல அறிக்கை செய்தாய். 13 எல்லாவற்றிற்கும் உயிர் கொடுக்கிற இறைவனுக்கு முன்பாகவும், பொந்தியு பிலாத்துவின் முன்னால் தனது சாட்சியில் நல்ல அறிக்கை செய்த கிறிஸ்து இயேசுவுக்கு முன்பாகவும் நான் உனக்குப் பொறுப்புக் கொடுக்கிறேன். 14 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மீண்டும் தோன்றுமளவும், எவ்வித மாசும் மறுவுமின்றி இந்தக் கட்டளைகளைக் கைக்கொள். 15 இறைவனே தமக்குரிய காலத்தில் கிறிஸ்துவை தோன்றப்பண்ணுவார். இறைவனே துதிக்கப்படத்தக்க ஒரே ஆளுநரும், அரசர்களுக்கு அரசர், கர்த்தர்களுக்கு கர்த்தர் ஆனவர். 16 இறைவன் ஒருவரே சாவாமை உடையவர். அணுக முடியாத ஒளியில் வாழ்பவர். ஒருவராலும் காணப்படாதவர், காணவும் முடியாதவர். அவருக்கே கனமும், நித்திய வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.

17 இந்த உலகத்தில் செல்வந்தர்களாய் இருக்கிறவர்களிடம், அகந்தை உடையவர்களாய் இருக்கவேண்டாம் என்றும், அவர்களுடைய நம்பிக்கையை நிலையற்ற செல்வத்தின்மேல் வைக்கவேண்டாம் என்றும் கட்டளையிடு. நாம் அனுபவித்து மகிழும்படி எல்லாவற்றையும் நிறைவாக நமக்குக் கொடுக்கும் இறைவனில் அவர்களுடைய நம்பிக்கையை, வைக்கும்படி கட்டளையிடு. 18 அவர்கள் தங்கள் பணத்தைக் கொடுத்து நன்மை செய்யவேண்டும் என்றும், நற்செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாய் இருக்கவேண்டும் என்றும், தாராள மனமுள்ளவர்களாயும், மனமுவந்து தங்களுக்குள்ளவற்றை பகிர்ந்து கொடுக்க விருப்பமுடையவர்களாயும் இருக்கவேண்டும் என்றும் கட்டளையிடு. 19 இவ்விதமாகவே, அவர்கள் வருங்காலத்திற்கான உறுதியான அஸ்திபாரமாக தங்களுக்குத் திரவியத்தைச் சேர்த்து வைத்துக்கொள்வார்கள். இதனால், அவர்கள் உண்மையான வாழ்வை அடைய முடியும்.

20 தீமோத்தேயுவே, இறைவன் உன்னிடத்தில் ஒப்படைத்தவற்றைக் கவனமாகக் காத்துக்கொள். பக்தியில்லாத பேச்சுக்களையும், பொய்யாகவே அறிவு எனக்கூறும் முரண்பாடான நோக்கங்களையும் விட்டு விலகியிரு. 21 சிலர் இவற்றை அறிக்கைசெய்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போனார்கள்.

கிருபை உன்னோடு இருப்பதாக.

Veja também

Publicidade
1 Timóteo
Ver todos os capítulos de 1 Timóteo
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-