Publicidade

2 Tessalonicenses 1

1 பவுல், சில்வான், தீமோத்தேயு,

நம்முடைய பிதாவாகிய இறைவனிலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலும் இருக்கிற தெசலோனிக்கேயரின் திருச்சபைக்கு எழுதுகிறதாவது:

2 பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

நன்றியும் மன்றாட்டும்

3 பிரியமானவர்களே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆம் அது சரியானதே. ஏனெனில், உங்கள் விசுவாசம் மென்மேலும் வளர்ச்சியடைகிறது. அத்துடன், நீங்கள் ஒருவரிடத்தில் ஒருவர் பாராட்டுகிற அன்பும் பெருகுகிறது. 4 ஆகவே, உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற துன்புறுத்தல்கள் வேதனைகளின் மத்தியிலும், உங்களுடைய மன உறுதியையும், விசுவாசத்தையும்குறித்து, இறைவனுடைய திருச்சபைகள் மத்தியிலே, நாங்கள் பெருமிதமாய் பேசிக்கொள்கிறோம்.

5 இறைவனுடைய நியாயத்தீர்ப்பு நீதியானது என்பதற்கு, இவையெல்லாம் சாட்சியாயிருக்கிறது. இதன் விளைவாக நீங்கள் இறைவனுடைய அரசுக்குத் தகுதிவுள்ளவர்களாக எண்ணப்படுவீர்கள்; அதற்காகவே இந்த வேதனையை அனுபவிக்கிறீர்கள். 6 இறைவன் நீதியுள்ளவர்: உங்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துகிறவர்களுக்கு, அவர் துன்பத்தைக் கொடுப்பார். 7 துன்பமடைந்திருக்கும் உங்களுக்கோ, அவர் ஆறுதலைக் கொடுப்பார். அவ்வாறே அவர் எங்களுக்கும் ஆறுதலைக் கொடுப்பார். கர்த்தராகிய இயேசு தம்முடைய வல்லமையுள்ள தூதர்களோடு, பற்றியெரியும் நெருப்பில் பரலோகத்திலிருந்து வெளிப்படும்போது, இந்த நீதி நிகழும். 8 அப்பொழுது அவர் இறைவனை அறியாதவர்களையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் தண்டிப்பார். 9 நித்திய பேரழிவையே தண்டனையாக, அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் கர்த்தரின் முன்னிலையிலிருந்தும், அவருடைய வல்லமையின் மகிமையிலிருந்தும் புறம்பாக்கப்படுவார்கள். 10 தம்முடைய பரிசுத்த மக்களில், அதாவது கர்த்தரை விசுவாசித்த எல்லோர் மத்தியிலும் அவர் மகிமைப்படும்படி, அவர் வரும் நாளிலே அவரைப் போற்றிப் புகழ்வார்கள். ஏனெனில், நாங்கள் உங்களுக்கு அறிவித்த சாட்சியை விசுவாசித்ததனால், நீங்களும் அந்த மக்களுக்குள் இடம்பெறுவீர்கள்.

11 இதை மனதில்கொண்டு, நம்முடைய இறைவனின் அழைப்புக்கு நீங்கள் தகுதிவுள்ளவர்கள் என்று எண்ணவேண்டும் என, உங்களுக்காக நாங்கள் மன்றாடுகிறோம். அத்துடன், உங்களுடைய நல்ல நோக்கங்கள் எல்லாவற்றையும், உங்களுடைய விசுவாசத்தின் ஏவுதலினால் உண்டாகும். உங்களது ஒவ்வொரு செயலையும், இறைவன் தம்முடைய வல்லமையினால் நிறைவேற்றவேண்டும் என்றும் மன்றாடுகிறோம். 12 நமது இறைவனிடமும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்து வரும் கிருபையினாலே, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பெயர் உங்களில் மகிமைப்படவேண்டும். நீங்களும் அவரிலே மகிமைப்படவேண்டும் என்று நாங்கள் மன்றாடுகிறோம்.

Veja também

Publicidade
2 Tessalonicenses
Ver todos os capítulos de 2 Tessalonicenses
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-