Publicidade

Gálatas 6

எல்லோருக்கும் நன்மை செய்தல்

1 பிரியமானவர்களே, யாராவது ஒரு பாவம் செய்து அகப்பட்டுக்கொண்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் அவனை சாந்தமாக நல்வழிப்படுத்த வேண்டும். நீங்களும் கவனமாயிருங்கள். ஏனெனில், நீங்களும்கூட சோதனைக்கு உள்ளாகலாம். 2 ஒவ்வொருவரும், மற்றவர்களுடைய சுமைகளைச் சுமக்க உதவிசெய்யுங்கள். இவ்விதமாகவே, நீங்கள் கிறிஸ்துவின் கட்டளையை நிறைவேற்றுவீர்கள். 3 யாராவது தன்னுடைய உண்மை நிலையை அறியாது, தன்னை ஒரு முக்கியமான ஆளாகக் கருதினால், அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான். 4 ஒவ்வொருவனும் தன்னுடைய செயல்களைத் தானே சோதித்துப் பார்க்கவேண்டும். அப்பொழுது மற்றவர்களுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்க்காமல், தன்னுடைய செயலின் தன்மையிலேயே ஒருவன் பெருமைப்பட முடியும். 5 ஒவ்வொருவனும் தன்னுடைய சுமைக்குத் தானே பொறுப்பாளி. 6 இறைவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்கிறவர்கள், தங்களுக்கு அதைக் கற்றுக் கொடுக்கிறவர்களுடன், தங்களிடமுள்ள எல்லா நன்மைகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

7 ஏமாந்து போகவேண்டாம்: இறைவனை ஏமாற்றித் தப்பமுடியாது. ஒரு மனிதன் தான் விதைக்கிறதையே அறுவடை செய்வான். 8 ஒருவன் தன்னுடைய மாம்ச இயல்புக்கு விதைத்தால், அந்த மாம்ச இயல்பிலிருந்து அழிவையே அறுவடையாகப் பெற்றுக்கொள்வான்; ஒருவன் பரிசுத்த ஆவியானவரைப் பிரியப்படுத்துவதற்காக விதைத்தால், அந்த பரிசுத்த ஆவியானவரிடமிருந்து நித்திய வாழ்வை அறுவடையாகப் பெற்றுக்கொள்வான். 9 நன்மை செய்வதில் நாம் சோர்வடையாது இருக்கவேண்டும். நாம் அதைக் கைவிடாமல் செய்யும்போது, ஏற்றகாலத்தில் அதன் அறுவடையைப் பெற்றுக்கொள்வோம். 10 ஆகவே நமக்குத் தருணம் கிடைக்கும்போதெல்லாம், எல்லா மக்களுக்கும் நன்மையைச் செய்வோமாக. முக்கியமாக விசுவாசிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நன்மை செய்யவேண்டும்.

புதிய படைப்பே முக்கியம்

11 என் கையெழுத்தாக நான் உங்களுக்கு எவ்வளவு பெரிய எழுத்துக்களில் இதை எழுதினேன் என்று பாருங்கள்.

12 வெளித்தோற்றத்தைக் காண்பித்து, மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற முயலுகிறவர்களே விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். கிறிஸ்துவினுடைய சிலுவையின் நிமித்தம், தாங்கள் துன்புறுத்தப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளும் ஒரே காரணத்திற்காகவே அவர்கள் இதைச் செய்கிறார்கள். 13 விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களும், மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்ளாமல் இருக்கிறார்களே; அப்படியிருக்க உங்கள் விருத்தசேதனத்தைக் குறித்துத் தாங்கள் பெருமிதம் கொள்வதற்காகவே, நீங்களும் அதைச் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். 14 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைத் தவிர, வேறு எதைக் குறித்தும் பெருமைகொள்வது வேண்டாம். என்னைப் பொறுத்தவரையில், அந்தச் சிலுவையில், உலகத்தின் கவர்ச்சிகரமான யாவும் அறையப்பட்டவைகளாக இருக்கின்றன. இந்த உலகத்தின் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில், நானும் சிலுவையில் அறையப்பட்டவனாகவே இருக்கிறேன். 15 ஒருவன் விருத்தசேதனம் செய்துகொள்கிறானா அல்லது அதைச் செய்யாதிருக்கிறானா என்பது முக்கியமல்ல, அவன் ஒரு புதிய படைப்பாய் வாழ்கிறானா என்பதே முக்கியம். 16 இந்த ஒழுங்குவிதியைப் பின்பற்றுகிறவர்களுக்கு சமாதானமும், இரக்கமும் உண்டாவதாக. இறைவனுடைய இஸ்ரயேலர்கள்மேலும் அது இருப்பதாக.

17 இனிமேலாவது ஒருவனும் எனக்குத் துன்பம் உண்டாக்காதிருக்கட்டும். ஏனெனில் இயேசுவின் தழும்புகளை நான் என் உடலில் சுமக்கிறேனே.

18 பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடன் இருப்பதாக. ஆமென்.

Veja também

Publicidade
Gálatas
Ver todos os capítulos de Gálatas
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-