பிறவியிலேயே பார்வையற்றவனை இயேசு குணமாக்குதல்
1 இயேசு நடந்துபோகையில், பிறந்ததிலிருந்தே பார்வைற்றவனாயிருந்த ஒருவனைக் கண்டார். 2 அவருடைய சீடர்கள் அவரிடம், "போதகரே, இவன் பார்வையற்றவனாய் பிறந்தது யார் செய்த பாவத்தினால்? இவனுடைய பாவத்தினாலா? அல்லது இவனுடைய பெற்றோரின் பாவத்தினாலா?" என்று கேட்டார்கள்.
3 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "இவனுடைய பாவத்தினாலோ, இவனுடைய பெற்றோரின் பாவத்தினாலோ அல்ல. இவனுடைய வாழ்க்கையில் இறைவனுடைய செயல்கள் வெளிப்படும்படியாகவே இப்படி ஏற்பட்டிருக்கிறது. 4 பகல் வேளையாய் இருக்கும்போதே, என்னை அனுப்பினவருடைய வேலையை நான் செய்யவேண்டும். இரவு வருகிறது, அப்பொழுது ஒருவராலும் வேலைசெய்யமுடியாது. 5 நான் உலகத்தில் இருக்கையில், நானே உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிறேன்" என்றார்.
6 இயேசு இவைகளைச் சொல்லியபின், தரையிலே துப்பி, உமிழ் நீரினால் சிறிதளவு சேறுண்டாக்கி, அவனுடைய கண்களிலே அதைப் பூசினார். 7 பின்பு இயேசு அவனிடம், "நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு" என்றார். சீலோவாம் என்பதன் அர்த்தம், "அனுப்பப்பட்டவன்" என்பதாகும். அவன் அப்படியே போய் கழுவி பார்வையடைந்து வீடு திரும்பினான்.
8 அவனுடைய அயலவரும், முன்பு அவன் பிச்சை கேட்டுக்கொண்டிருந்ததைக் கண்டவர்களும், "இங்கே உட்கார்ந்திருந்து பிச்சை கேட்டவன் இவன் அல்லவா?" என்றார்கள். 9 சிலர், "இது அவன் தான்" என்றார்கள்.
இன்னும் சிலர், "இல்லை, இது அவனைப் போன்ற வேறொருவன்" என்றார்கள்.
ஆனால் அவனோ, "நான்தான் அவன்" என்றான்.
10 அப்பொழுது அவர்கள் அவனிடம், "அப்படியானால் உனக்கு எப்படி பார்வை கிடைத்தது?" என்றார்கள்.
11 அதற்கு அவன், "இயேசு என்று அழைக்கப்படும் ஒருவர் சிறிதளவு சேறுண்டாக்கி, அதை என் கண்களில் பூசி, சீலோவாம் குளத்தில் போய் கழுவும்படி எனக்குச் சொன்னார். அப்படியே நான் போய் கழுவியபோது, என்னால் பார்க்கமுடிந்தது" என்றான்.
12 அப்பொழுது அவர்கள் அவனிடம், "அவர் எங்கே?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவன், "எனக்குத் தெரியாது" என்றான்.