Publicidade

Jó 41

1 "லிவியாதான் என்னும் பெரிய பாம்பைத் தூண்டிலினால் பிடிக்க முடியுமோ?

நீ அதின் நாக்கைக் கயிற்றினால் கட்டமுடியுமோ?

2 அதற்கு மூக்கணாங்கயிறு போட்டுக் கட்டமுடியுமோ?

அல்லது அதின் தாடையைக் கொக்கியினால் ஊடுருவக் குத்த உன்னால் முடியுமோ?

3 அது உன்னிடத்தில் இரக்கம் கேட்டு, மன்றாடிக்கொண்டிருக்குமோ?

உன்னிடம் மெதுவான வார்த்தையைப் பேசுமோ?

4 வாழ்நாள் முழுவதும் நீ அதை அடிமையாக்கிக்கொள்ளும்படி,

அது உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்யுமோ?

5 ஒரு பறவையைப்போல் நீ அதை வளர்க்க முடியுமோ?

உன் பெண் பிள்ளைகள் அதனுடன் விளையாட அதைக் கட்டிவைப்பாயோ?

6 வியாபாரிகள் அதைப் பரிமாறிக்கொள்வார்களோ?

அதை அவர்கள் வர்த்தகர் நடுவில் பங்கிட்டுக்கொள்வார்களோ?

7 அதின் உடலை ஈட்டிகளினாலும்,

அதின் தலையைக் கூர்மையான மீன்பிடி ஈட்டியால் குத்துவாயோ?

8 அதின்மேல் உன் கையைப்போட்டால், அது அடிப்பதை நீ மறக்கமாட்டாய்;

இனி அதின்மேல் கைபோடவுமாட்டாய்.

9 அதை அடக்குவதற்கான எந்த எதிர்பார்ப்பும் வீணானது;

அதின் தோற்றமே பயமுறுத்தக் கூடியது.

10 அதை எழுப்ப தைரியமுள்ளவன் இல்லை.

அப்படியிருக்க என்னை எதிர்த்துநிற்க யாரால் முடியும்?

11 தனக்கு பதில் கொடுக்கவேண்டுமென்று முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்?

வானத்தின் கீழே இருப்பவை ஒவ்வொன்றும் என்னுடையவை.

12 "இப்பொழுது நான் லிவியாதானின் கால்களைப்பற்றியும்,

அதின் பலத்தைப் பற்றியும், வசீகரத் தோற்றத்தைப்பற்றியும் பேசத் தவறமாட்டேன்.

13 அதின் மேற்தோலை உரிக்கக்கூடியவன் யார்?

அதை மூக்கணாங்கயிற்றுடன் அணுக யாரால் முடியும்?

14 பயங்கரப் பற்கள் நிறைந்த

அதின் வாயின் தாடையைப் பிடித்துத் திறக்கக்கூடியவன் யார்?

15 அதின் முதுகில் உள்ள செதில்கள் நெருங்கி

இணைக்கப்பட்ட கேடய வரிசைகள்போல் இருக்கின்றன.

16 அவைகளின் ஒவ்வொரு வரிசையும்

காற்றுப் புகாதபடி மிக நெருக்கமாய் இருக்கின்றன.

17 அவை ஒன்றோடொன்று நெருக்கமாய் இணைந்து

பிரிக்க முடியாதவாறு, ஒட்டிக்கொண்டிருக்கின்றன.

18 அது மூச்சுவிடும்போது அனல் வீசுகிறது;

அதின் கண்கள் அதிகாலையின் ஒளிக்கீற்றுகளைப்போல் இருக்கின்றன.

19 அதின் வாயிலிருந்து நெருப்புத் தணல்கள் புறப்பட்டு,

நெருப்புப் பொறிகளும் பறக்கும்.

20 எரியும் நாணல்மீது கொதிக்கும் சட்டியிலிருந்து எழும்புவதுபோல்,

அதின் மூக்கிலிருந்து புகை புறப்படும்.

21 அதின் மூச்சு கரியைக் கொழுத்தி எரியச்செய்கிறது;

அதின் வாயிலிருந்து ஜூவாலை பாய்கிறது.

22 அதின் கழுத்திலே வல்லமை இருக்கும்;

திகில் அதற்கு முன்னே செல்லும்.

23 அதின் தசை மடிப்புகள் அசைக்க முடியாதபடி

ஒன்றோடொன்று இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்கின்றன.

24 அதின் நெஞ்சு கற்பாறையைப்போலவும்,

அம்மிக் கல்லைப்போலவும் கடினமானதாய் இருக்கிறது.

25 அது எழும்பும்போது பலவான்கள் திகிலடைந்து,

அதின் தாக்குதலுக்கு பயந்து ஓடுகிறார்கள்.

26 அதைத் தாக்குகிறவனுடைய வாள், ஈட்டி, அம்பு,

கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.

27 அது இரும்பை வைக்கோலாகவும்,

வெண்கலத்தை உளுத்துப்போன மரமாகவும் மதிப்பிடும்.

28 அம்பு அதனைத் துரத்தாது;

கவண்கற்கள் அதற்குப் பதரைப் போலிருக்கும்.

29 பெருந்தடி அதற்கு வைக்கோல் போன்றது;

அது ஈட்டியின் சத்தத்திற்கு நகைக்கிறது.

30 அதின் அடிப்பக்கம் கூர்மையான கற்கள் கிடந்தாலும்,

சூடடிக்கும் இயந்திரம் சேற்றில் ஏற்படுத்தும் அடையாளத்தை ஏற்படுத்தி செல்கிறது.

31 அது கொதிக்கும் பானையைப்போல் ஆழ்கடல்களைப் பொங்கச்செய்து,

தைலம்போலக் கடலைக் கலக்குகிறது.

32 அது தன் பின்னால் பாதையை மின்னச்செய்யும்;

அப்பொழுது ஆழமானது வெளுப்பான நரையைப்போல் தோன்றும்.

33 பூமியின்மேல் உள்ளதொன்றும் அதற்கு நிகரானதல்ல;

அது பயமற்ற ஒரு விலங்கு.

34 அகந்தையான எல்லாவற்றையும் அது அற்பமாய் எண்ணுகிறது;

பெருமைகொண்ட எல்லாவற்றுக்கும் மேலான அரசன் அதுவே."

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-