Publicidade

Jó 23

யோபு பேசுதல்

1 அதற்கு யோபு மறுமொழியாக சொன்னது:

2 "இன்றும் என் முறையீடு கசப்பானதாக இருக்கிறது;

நான் வேதனையுடன் புலம்பியும், அவருடைய கரங்கள் என்மேல் பாரமாயிருக்கின்றன.

3 அவரை எங்கே கண்டுகொள்ளலாம் என்று மாத்திரம் எனக்குத் தெரிந்தாலோ,

அவரின் உறைவிடத்திற்கு என்னால் போகக் கூடுமானாலோ,

4 நான் என் வழக்கை அவர் முன்னால் வைப்பேன்;

என் வாயை விவாதங்களால் நிரப்புவேன்.

5 அவர் எனக்கு என்ன பதில் சொல்வார் என்பதை அறிந்து,

அவர் சொல்வதை யோசித்துப் பார்ப்பேன்.

6 அவர் தமது மிகுந்த வல்லமையினால் என்னை எதிர்ப்பாரோ?

இல்லை, அவர் எனக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவரமாட்டார்.

7 நேர்மையானவன் அவருக்குமுன் தன் வழக்கைக் கொண்டுவரலாம்;

நானும் என் நீதிபதியிடமிருந்து என்றென்றும் விடுதலை பெறுவேன்.

8 "ஆனால் நான் கிழக்கேபோனால் அங்கே அவர் இல்லை;

மேற்கே போனாலும் நான் அவரைக் காணவில்லை.

9 அவர் வடக்கிலே வேலையாயிருக்கும்போதும் நான் அவரைக் காணவில்லை;

அவர் தெற்கே திரும்பும்போதும் ஒரு நொடிப்பொழுதுகூட நான் அவரைக் காணவில்லை.

10 ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்;

அவர் என்னைச் சோதித்தபின், நான் தங்கமாய் விளங்குவேன்.

11 என் பாதங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றின;

நான் விலகாமல் அவருடைய வழியையே கடைப்பிடித்திருக்கிறேன்.

12 அவருடைய உதடுகளின் கட்டளைகளிலிருந்து நான் விலகவில்லை;

என் அன்றாட உணவைவிட, அவருடைய வாயின் வார்த்தைகளை ஒரு பொக்கிஷமாக நான் நினைத்தேன்.

13 "ஆனால் அவரோ தன்னிகரற்றவராய் இருக்கிறார்; அவரை யாரால் எதிர்க்கமுடியும்?

தாம் விரும்பும் எதையும் அவர் செய்வார்.

14 எனக்கு திட்டமிட்டிருக்கிறதை அவர் நிறைவேற்றுகிறார்;

இப்படிப்பட்ட அநேக திட்டங்களை அவர் இன்னும் வைத்திருக்கிறார்.

15 அதினால்தான் நான் அவர் முன்பு திகில் அடைகிறேன்;

இவற்றையெல்லாம் சிந்திக்கும்போது அவருக்குப் பயப்படுகிறேன்.

16 இறைவன் என் இருதயத்தை சோர்வடையப் பண்ணினார்;

எல்லாம் வல்லவர் என்னைத் திகிலடையப் பண்ணினார்.

17 அப்படியிருந்தும், நான் இருளினால் மவுனமாக்கப்படவில்லை;

என் முகத்தை மூடும் காரிருளின் நிமித்தம் நான் பேசாதிருக்கவும் இல்லை.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-19_11-20-24-