Publicidade

Jeremias 47

பெலிஸ்தியரைப் பற்றிய செய்தி

1 பார்வோன், காசாவைத் தாக்குவதற்கு முன் பெலிஸ்தியரைக் குறித்து, இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே:

2 யெகோவா கூறுவது இதுவே:

"பாருங்கள், வடக்கிலே வெள்ளம் எவ்வளவாய் பொங்கி எழுகிறது.

அது கரைபுரண்டோடும் வெள்ளமாகும்.

அது நாட்டின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும் புரண்டோடும்.

பட்டணங்கள்மேலும், அதில் வாழும் யாவர்மேலும் புரண்டோடும்.

மக்கள் அலறி அழுவார்கள்.

நாட்டில் குடியிருப்போர் எல்லோரும் புலம்புவார்கள்.

3 பாய்ந்தோடும் குதிரைகளின் குளம்புகளின் ஒலியையும்,

பகைவர்களின் தேர்களின் சத்தத்தையும்,

தேர்ச்சக்கரங்களின் இரைச்சலையும் கேட்டு ஓலமிடுவார்கள்.

தந்தையர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்யும்படி திரும்பமாட்டார்கள்.

அவர்களுடைய கைகள் சோர்ந்துபோகும்.

4 ஏனெனில் பெலிஸ்தியர் அனைவரையும்

அழிக்கும் நாள் வந்திருக்கிறது.

தீருவுக்கும் சீதோனுக்கும் உதவிசெய்யக்கூடிய,

இன்னும் தப்பியிருப்பவர்களை அழிப்பதற்கான நாள் வந்திருக்கிறது.

கப்தோரின் கரையோரத்தில் மீதியாயிருக்கும்

பெலிஸ்தியரை யெகோவா அழிக்கப்போகிறார்.

5 காசா துக்கங்கொண்டாடுதலுக்காக தன் தலையை மொட்டையடிக்கும்.

அஸ்கலோன் மவுனமாய் இருக்கும்.

சமவெளியில் மீதியாயிருப்பவர்களே,

எவ்வளவு காலத்திற்கு உங்களை நீங்களே வெட்டிக்கொள்வீர்கள்?

6 " ‘ஐயோ! யெகோவாவின் வாளே!

நீ ஓய்வதற்கு எவ்வளவு காலம் செல்லும்?

உறைக்குத் திரும்பி அங்கு ஓய்ந்திரு

என்று நீங்கள் கதறுகிறீர்களே!’

7 ஆனால் அஸ்கலோனையும்,

கரையோரப் பகுதிகளையும் தாக்கும்படி,

யெகோவா கட்டளையிட்டு உத்தரவு கொடுத்திருக்க

அது எப்படி ஓய்ந்திருக்கும்?"

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-19_11-20-24-