சீரோபேனிக்கியாப் பெண்ணின் விசுவாசம்
24 இயேசு அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, தீரு பட்டணத்தின் சுற்றுப் புறத்திற்குச் சென்றார். அவர் ஒரு வீட்டிற்குள் போய், தான் அங்கு இருப்பதை ஒருவரும் அறியாதிருக்க வேண்டும் என்று விரும்பினார்; ஆனால், அவர் அங்கிருப்பதை மறைக்க முடியவில்லை. 25 ஒரு பெண் இயேசுவைக்குறித்து கேள்விப்பட்ட உடனே, அவரிடத்தில் வந்து அவருடைய பாதத்தில் விழுந்தாள். அவளது மகளை ஒரு அசுத்த ஆவி பிடித்திருந்தது. 26 அவள் சீரோபேனிக்கியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட, ஒரு கிரேக்கப் பெண். தனது மகளிடத்திலிருக்கும் அந்தப் பிசாசைத் துரத்திவிடும்படி, அவள் இயேசுவைக் கெஞ்சிக் கேட்டாள்.
27 இயேசு அவளிடம், "முதலில் பிள்ளைகள், அவர்களுக்கு வேண்டியதைச் சாப்பிடட்டும். ஏனெனில் பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல" என்றார்.
28 அதற்கு அவள், "ஆம், ஆண்டவரே, ஆனால் மேஜையின்கீழ் இருக்கும் நாய்க்குட்டிகள், பிள்ளைகள் சிந்தும் அப்பத்துண்டுகளைத் தின்னுமே" என்று பதிலளித்தாள்.
29 அப்பொழுது இயேசு அவளிடம், "உனது இந்தப் பதிலே போதும், நீ போகலாம்; அந்தப் பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது" என்றார்.
30 அப்படியே அவள் வீட்டிற்குப்போய், தனது மகள் படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளைவிட்டுப் போயிருந்தது.