Publicidade

Cânticos 5

மணவாளன்

1 என் சகோதரியே! என் மணவாளியே!

நான் என் தோட்டத்திற்கு வந்தேன்,

என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்;

என் தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்;

என் திராட்சைரசத்தை என் பாலோடும் குடித்தேன்.

சிநேகிதர்களே! சாப்பிடுங்கள்; பிரியமானவர்களே!

குடியுங்கள், திருப்தியாகக் குடியுங்கள்.

சூலமித்தியாளின் இரவு

மணவாளி

2 நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது;

கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்:

என் சகோதரியே! என் பிரியமே!

என் புறாவே! என் உத்தமியே!

கதவைத் திற;

என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.

3 என் உடையைக் கழற்றிப்போட்டேன்;

நான் எப்படி அதைத் திரும்பவும் அணிவேன்,

என் பாதங்களைக் கழுவினேன்,

நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன்.

4 என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாக நீட்டினார்,

அப்பொழுது என் உள்ளம் அவர்நிமித்தம் பொங்கினது.

5 என் நேசருக்குக் கதவைத் திறக்க நான் எழுந்தேன்;

பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும்,

என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது.

6 என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்;

என் நேசரோ இல்லை, போய்விட்டார்;

அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று.

அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை;

அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு பதில் கொடுக்கவில்லை.

7 நகரத்தில் உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டு,

என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்;

மதிலின் காவற்காரர்கள் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள்.

8 எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால்,

நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன்.

மணவாளியின் தோழிகள்

9 பெண்களுக்குள் அழகுமிகுந்தவளே!

மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?

நீ இப்படி எங்களை ஆணையிட,

மற்ற நேசரைவிட உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?

மணவாளி

10 என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்;

பிரகாசமானவர், வல்லமையுள்ளவர்,

யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை.

11 அவருடைய தலை தங்கமயமாக இருக்கிறது;

அவருடைய தலைமுடி சுருள் சுருளாகவும்,

காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது.

12 அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாகத் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும்,

பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாகப் பதிக்கப்பட்டவைகளுமாக இருக்கிறது.

13 அவருடைய கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும்,

வாசனையுள்ள மலர்களைப்போலவும் இருக்கிறது;

அவருடைய உதடுகள் லீலிமலர்களைப் போன்றது,

வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது.

14 அவருடைய கைகள் படிகப்பச்சை பதித்த பொன்வளையல்களைப்போல் இருக்கிறது;

அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்களால் மூடப்பட்ட பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.

15 அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது;

அவருடைய தோற்றம் லீபனோனைப்போலவும்

கேதுருக்களைப்போலவும் சிறப்பாக இருக்கிறது.

16 அவருடைய வாய் மிகவும் இனிப்பாக இருக்கிறது;

அவர் முற்றிலும் அழகுள்ளவர்.

இவரே என் நேசர்; எருசலேமின் இளம்பெண்களே! இவரே என் சிநேகிதர்.

Veja também

Publicidade
Cânticos
Ver todos os capítulos de Cânticos
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_06-50-08-