Publicidade

Colossenses 4

1 எஜமான்களே, உங்கள் அடிமைகளுக்கு சரியானதையும் நியாயமானதையும் கொடுங்கள். ஏனெனில், பரலோகத்தில் உங்களுக்கும் ஒரு எஜமான் இருக்கிறாரென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.

அறிவுரைகள்

2 விழிப்புள்ளவர்களாயும் நன்றி உள்ளவர்களாயும், மன்றாடுவதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். 3 கிறிஸ்துவின் இரகசியத்தை நாங்கள் அறிவிக்கும்படி, எங்களுடைய செய்திக்கான வாசலை இறைவன் திறந்துகொடுக்க வேண்டுமென்று எங்களுக்காகவும் மன்றாடுங்கள்; இந்தப் பணிக்காகவே நான் சிறையாக்கப்பட்டிருக்கிறேன். 4 நான் அந்த இரகசியத்தை தகுந்தபடி தெளிவாய் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மன்றாடுங்கள். 5 திருச்சபைக்கு உட்படாத வெளி ஆட்களுடன் ஞானமாய் நடந்துகொள்ளுங்கள்; கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 6 உங்களது உரையாடல் எப்பொழுதும் கனிவானதாயும் சுவையுள்ளதாயும் இருக்கட்டும். அப்பொழுதே உங்களிடம் கேள்வி கேட்கிறவர்களுக்கு உங்களால் தகுந்த விதத்தில் பதில் சொல்லக்கூடியதாய் இருக்கும்.

கடைசி வாழ்த்துகள்

7 தீகிக்கு என்னைப்பற்றிய செய்தி எல்லாவற்றையும் உங்களுக்கு சொல்வான். அவன் அன்பு சகோதரனாகவும், உண்மையுள்ள ஊழியக்காரனாகவும், கர்த்தரில் உடன்வேலைக்காரனாகவும் இருக்கிறான். 8 நாங்கள் எல்லோரும் எப்படியிருக்கிறோம் என்பதை அவன் உங்களுக்குச் சொல்லி, உங்களை மனதளவில் உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவேதான், நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். 9 அவன் எங்கள் அன்புள்ள சகோதரனான நம்பிக்கைக்குரிய ஒநேசிமுவுடன் வருகிறான். அவனும் உங்களில் ஒருவனே. அவர்கள் இங்கு நடப்பவை எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

10 என்னுடன் சிறையில் இருக்கும் அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறான். அப்படியே பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரனான மாற்குவும் வாழ்த்துதல் அனுப்புகிறான். அவனைக்குறித்து ஏற்கெனவே நீங்கள் அறிவுறுத்தல் பெற்றிருக்கிறீர்கள்; அவன் உங்களிடம் வந்தால், அவனை வரவழைத்துக்கொள்ளுங்கள்.

11 யுஸ்து என அழைக்கப்படும் இயேசுவும், உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறான். இறைவனுடைய அரசின் வேலையில், எனது உடன் ஊழியர்கள் மத்தியில் இருக்கும் யூதர்கள் இவர்கள் மட்டுமே. இவர்கள் எனக்கு ஆறுதலாய் இருக்கிறார்கள்.

12 கிறிஸ்து இயேசுவினுடைய ஊழியனான எப்பாப்பிராத்து உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறான். அவனும் உங்களில் ஒருவனே. இறைவனுடைய சித்தம் முழுவதிலும் நீங்கள் வளர்ச்சியடைந்தவர்களும் முழுமையான நிச்சயம் உடையவர்களுமாய் உறுதியாய் நிற்கவேண்டும் என்பதற்காக அவன் உங்களுக்காய் எப்பொழுதும் மன்றாட்டிலே போராடுகிறான். 13 அவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயாவிலும் எராப்போலியிலும் இருக்கிறவர்களுக்காகவும், ஊக்கமாய் வேலைசெய்கிறான் என்பதை நான் சாட்சியாகக் கூறுகிறேன்.

14 எங்கள் அன்புக்குரிய வைத்தியன் லூக்காவும் தேமாவும் உங்களுக்கு வாழ்த்துதல் அனுப்புகிறார்கள்.

15 லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களுக்கும், நிம்பாவுக்கும், அவளுடைய வீட்டில் கூடிவருகிற சபையினருக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள்.

16 இந்தக் கடிதம் உங்களிடையே வாசிக்கப்பட்டபின், லவோதிக்கேயாவிலிருக்கிற திருச்சபைகளிலேயும் இதை வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள்; அதுபோலவே, லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தை நீங்கள் வாசியுங்கள்.

17 நீங்கள் அர்க்கிப்புவிடம், "கர்த்தரில் நீ பெற்றுக்கொண்ட பணியை நிறைவேற்றும்படி பார்த்துக்கொள்" என்று சொல்லுங்கள்.

18 பவுலாகிய நான் இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினாலே எழுதுகிறேன். நான் சிறையாக்கப்பட்டிருப்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

Veja também

Publicidade
Colossenses
Ver todos os capítulos de Colossenses
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-15_21-32-39-