Publicidade

Oséias 12

1 எப்பிராயீம் காற்றை மேய்கிறான்,

நாள்முழுவதும் கொண்டற்காற்றைப் பின்தொடர்ந்து செல்கிறான்.

பொய்களையும், வன்செயல்களையும் பெருகப்பண்ணுகிறான்.

அவன் அசீரியாவோடு ஒப்பந்தம் செய்கிறான்;

எகிப்திற்கு ஒலிவ எண்ணெய் அனுப்புகிறான்.

2 யூதாவுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு யெகோவாவிடம் இருக்கிறது.

யாக்கோபின் மக்களை அவர்களுடைய வழிகளுக்குத்தக்கதாக அவர் தண்டிப்பார்;

அவர்களுடைய செயல்களுக்கேற்றபடி அவர்களுக்குப் பிரதிபலன் செய்வார்.

3 யாக்கோபு தாயின் கர்ப்பத்திலேயே,

தனது சகோதரனின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டான்;

மனிதனானபோது இறைவனோடு போராடினான்.

4 அவன் தூதனுடனும் போராடி வெற்றிகொண்டான்;

அவன் அவருடைய தயவுக்காக அழுது மன்றாடினான்.

இறைவன் அவனைப் பெத்தேலில் கண்டு,

அங்கே நம்முடன் பேசினார்.

5 சேனைகளின் இறைவனாகிய யெகோவா அவரே;

யெகோவா என்பது அவரது புகழ்வாய்ந்த பெயர்.

6 யாக்கோபின் மக்களே, நீங்கள் எல்லோரும் இறைவனிடம் திரும்பிவாருங்கள்.

அன்பையும் நீதியையும் கடைபிடியுங்கள்;

எப்பொழுதும் உங்கள் இறைவனுக்காகக் காத்திருங்கள்.

7 ஆனால் இப்பொழுது நீங்கள் கள்ளத்தராசுகளைப் பயன்படுத்துகிற

வியாபாரிபோல் இருக்கிறீர்கள்;

அவன் ஏமாற்றுவதையே விரும்புகிறான்.

8 அத்துடன் எப்பிராயீமோ,

"நான் மிகவும் பணக்காரன்; நான் செல்வந்தனாகிவிட்டேன்.

என் செல்வத்தினிமித்தம் அவர்கள் என்னில்

அநியாயத்தையோ, பாவத்தையோ கண்டுபிடிக்க முடியாது என்று பெருமைப்படுகிறான்."

9 "உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த

உங்கள் இறைவனாகிய யெகோவா நானே.

நான் உங்களது நியமிக்கப்பட்ட பண்டிகையின் நாட்களில் இருப்பதுபோல,

நான் திரும்பவும் உங்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணுவேன்.

10 அத்துடன் நான் இறைவாக்கினருடன் பேசி,

அவர்களுக்கு அநேக தரிசனங்களைக் கொடுத்தேன்;

அவர்களைக்கொண்டு உவமைகளினால் பேசினேன்."

11 கீலேயாத் கொடுமையானதா?

அதன் மக்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்;

கில்காலில் காளைகளைப் பலியிடுகிறார்களா?

அவர்களுடைய பலிபீடங்கள் உழுத வயலிலுள்ள

கற்குவியலைப்போல் ஆகும்.

12 யாக்கோபு ஆராமுக்கு ஓடிப்போனான்;

இஸ்ரயேல் தனக்கு மனைவியைப் பெறுவதற்காக வேலைசெய்தான்;

அவளுக்கான பணத்தைக் கொடுப்பதற்கு செம்மறியாடுகளை மேய்த்தான்.

13 யெகோவா இறைவாக்கினன் ஒருவனை அனுப்பி,

இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்;

இறைவாக்கினன் மூலம் இஸ்ரயேலரை பராமரித்தார்.

14 ஆயினும் எப்பிராயீம் யெகோவாவுக்குக் கசப்பாகக் கோபமூட்டியிருக்கிறான்;

எனவே அவனுடைய யெகோவா, அவனுடைய இரத்தப்பழியை அவன் மேலேயே சுமத்துவார்.

அவன் காட்டிய அவமதிப்புக்குத்தக்கதாய் அவனுக்குப் பதில் செய்வார்.

Veja também

Publicidade
Oséias
Ver todos os capítulos de Oséias
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-19_11-20-24-