Publicidade

Jó 17

1 என் ஆவி உடைகிறது, என் ஆயுசு நாட்கள் முடிகிறது;

கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.

2 கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ?

அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.

3 தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு,

எனக்காகப் பிணைக்கப்படுவீராக;

வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?

4 நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்;

ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.

5 எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ,

அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.

6 மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்;

அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன்.

7 இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது;

என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.

8 சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்;

குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.

9 நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்;

சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.

10 இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்;

உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை.

11 என் நாட்கள் முடிந்தது;

என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது.

12 அவைகள் இரவைப் பகலாக்கியது;

இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது.

13 அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும்,

பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்;

இருளில் என் படுக்கையைப் போடுவேன்.

14 அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்;

புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.

15 என் நம்பிக்கை இப்போது எங்கே?

நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?

16 அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்;

அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்" என்றான்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-