Publicidade

Jó 24

1 சர்வவல்லமையுள்ள தேவனுக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க,

அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?

2 சிலர் எல்லைக்குறிப்புகளை மாற்றி,

மந்தைகளைப் பலாத்காரமாகக் கொண்டுபோய் தங்கள் மந்தையில் சேர்க்கிறார்கள்.

3 தாய்தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய்,

விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள்.

4 தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் எல்லோரும் ஒளித்துக்கொள்ளுமளவுக்கு,

எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள்.

5 இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்;

வனாந்திரப் பகுதிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும்.

6 துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து,

அவனுடைய திராட்சைத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள்.

7 குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால்,

உடையில்லாமல் இரவுதங்கி,

8 மலைகளிலிருந்துவரும் மழையில் நனைந்து, ஒதுங்க இடமில்லாததினால் கன்மலையிலே ஒதுங்கிக்கொள்ளுகிறார்கள்.

9 அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து,

தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகு வாங்குகிறார்கள்.

10 அவனை உடையில்லாமல் நடக்கவும்,

பட்டினியாக அரிக்கட்டுகளைச் சுமக்கவும்,

11 தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும்,

தாகமுள்ளவர்களாக ஆலையாட்டவும் செய்கிறார்கள்.

12 ஊரில் மனிதர் தவிக்கிறார்கள்,

குற்றுயிராய்க்கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது;

என்றாலும், தேவன் அவர்கள் விண்ணப்பத்தைக் கவனிக்கிறதில்லை.

13 அவர்கள் வெளிச்சத்திற்கு விரோதமாக நடக்கிறவர்களின் கூட்டத்தார்;

அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும்,

அவருடைய பாதைகளில் தங்காமலும் இருக்கிறார்கள்.

14 கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து,

ஏழையையும் தேவையுள்ளவனைக் கொன்று,

இரவுநேரத்திலே திருடனைப்போல் திரிகிறான்.

15 விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற நேரத்திற்குக் காத்திருந்து:

என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள் என்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.

16 அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவிலே கன்னமிடுகிறார்கள்;

அவர்கள் வெளிச்சத்தை அறியமாட்டார்கள்.

17 விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது;

அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்துடன் பழகியிருக்கிறான்.

18 நீரோட்டத்தைப்போல வேகமாகப் போவான்;

தேசத்தில் அவனுடைய பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால்,

அவனுடைய திராட்சைத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை.

19 வறட்சியும் வெப்பமும் உறைந்த மழையை எரிக்கும்;

அப்படியே பாதாளமானது பாவிகளை எரிக்கும்.

20 அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்;

புழு திருப்தியாக அவனைத் தின்னும்;

அவன் அதன்பின்பு நினைக்கப்படுவதில்லை;

அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும்.

21 பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு,

விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான்.

22 தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பலமாக்குகிறான்;

அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் உயிரைப்பற்றி நிச்சயமில்லை.

23 தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால்,

அதின்மேல் உறுதியாக நம்பிக்கை வைக்கிறான்;

ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.

24 அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து,

பார்க்காமற்போய், தாழ்த்தப்பட்டு,

மற்ற எல்லோரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்;

கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.

25 அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி,

என் வார்த்தைகளைப் பொய்யாக்கக்கூடியவன் யார்" என்றான்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-