Publicidade

Provérbios 15

வாழ்வின் ஒழுங்குமுறைகள்

1 சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்;

கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். 2 ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்;

மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.

3 யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து,

நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது.

4 ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.

5 மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்;

கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.

6 நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு;

துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு.

7 ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்;

மூடர்களின் இருதயமோ அப்படியல்ல.

8 துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது;

செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.

9 துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது;

நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.

10 வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்;

கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.

11 பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க,

மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ?

12 பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்;

ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.

13 மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்;

மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.

14 புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்;

மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும்.

15 சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்;

மனரம்மியமோ நிரந்தர விருந்து.

16 சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட,

யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.

17 பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட,

சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது.

18 கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்;

நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.

19 சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்;

நீதிமானுடைய வழியோ ராஜபாதை.

20 ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்;

மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான்.

21 மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்;

புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான்.

22 ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்;

ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.

23 மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்;

ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

24 கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி,

விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும்.

25 அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்;

விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.

26 துன்மார்க்கர்களுடைய நினைவுகள்

யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;

சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.

27 பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்;

லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.

28 நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்;

துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.

29 துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்;

நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.

30 கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்;

நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.

31 வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது

ஞானிகளிடத்திலே தங்கும்.

32 புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்;

கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.

33 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்;

மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-