Publicidade

Isaías 18

எத்தியோப்பியாவுக்கு எதிரான இறைவாக்கு

1 எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால்,

இரைச்சலையுடைய செட்டைகளின் நாடே, ஐயோ உனக்குக் கேடு!

2 இந்த நாடு நாணல் படகுகளில் தண்ணீரின்மேல்

கடல் வழியாகத் தூதுவரை அனுப்புகிறது.

விரைந்து செல்லும் தூதுவர்களே,

உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும்,

தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடம் போங்கள்.

இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்;

இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

3 உலகத்தில் வாழ்பவர்களும்,

பூமியின் குடிமக்களே, நீங்கள் யாவரும்

மலைமேல் கொடியேற்றப்படும்போது,

அதைக் காண்பீர்கள்.

எக்காளம் முழங்கும்போது

அதைக் கேட்பீர்கள்.

4 யெகோவா என்னிடம் கூறுவது இதுவே:

"சூரிய ஒளியின் இளஞ்சூட்டைப் போலவும்,

அறுவடைகால வெப்பத்தின்போது வரும் மூடுபனிபோலவும்

நான் என்னுடைய உறைவிடத்தில் அமைதியாய் இருந்து பார்ப்பேன்."

5 ஏனெனில் அறுவடைக்குமுன்,

திராட்சை பூத்து, காய்த்து, பழங்களாகும்போது,

யெகோவா எத்தியோப்பியரை தளிர்களாகவும்,

படரும் கிளைகளாகவும் அரிவாள்களால் வெட்டி அப்புறப்படுத்தி விடுவார்.

6 அவையெல்லாம் இரைபிடிக்கும் மலைகளின் பிணந்தின்னும் பறவைகளுக்கும்,

காட்டு மிருகங்களுக்கும் விடப்படும்;

பிணந்தின்னும் பறவைகள் கோடைகாலத்திலும்,

காட்டு மிருகங்கள் மாரிகாலத்திலும் அவைகளைத் தின்னும்.

7 உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும்,

தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடமிருந்து

சேனைகளின் யெகோவாவுக்கு அந்நேரத்தில் கொடைகள் கொண்டுவரப்படும்.

இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்;

இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடைகள் சேனைகளின் யெகோவாவினுடைய பெயருக்குரிய இடமாகிய சீயோன் மலைக்குக் கொண்டுவரப்படும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-