Publicidade

Isaías 56

அந்நியருக்கும் இரட்சிப்பு

1 யெகோவா சொல்வது இதுவே:

"நியாயத்தைக் கைக்கொண்டு

நீதியைச் செய்யுங்கள்.

ஏனெனில், எனது இரட்சிப்பு சமீபமாய் இருக்கிறது;

எனது நீதி விரைவில் வெளிப்படுத்தப்படும்.

2 இதை செய்கிறவர்களும், இவற்றை உறுதியாய் பற்றிக்கொண்டு கைக்கொண்டு,

ஓய்வுநாளை தூய்மைக்கேடாக்காமல் கடைபிடித்து,

தீமைசெய்யாதபடி தன் கையை விலக்கிக் காத்துக்கொள்கிற மனிதர்கள்

ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்."

3 யெகோவாவோடு தன்னை இணைத்துக்கொண்டிருக்கும் அந்நியர்,

"யெகோவா என்னைத் தமது மக்களிடமிருந்து நிச்சயமாகப் பிரித்துவிடுவார்"

என்று சொல்லாமல் இருக்கட்டும்.

அவ்வாறே அண்ணகன் எவனும், "நான் பட்டுப்போன மரந்தானே"

என்று முறைப்பாடு சொல்லாமலும் இருக்கட்டும்.

4 யெகோவா சொல்வது இதுவே:

"எனது ஓய்வுநாளை கடைப்பிடித்து,

எனக்கு விருப்பமானவற்றைத் தெரிந்துகொண்டு

என் உடன்படிக்கையை உறுதியாய்க் கைக்கொள்கிறவர்களான அண்ணகர்களுக்கு,

5 என் ஆலயத்திற்குள்ளும், அதின் சுவர்களிலும் ஒரு நினைவுச் சின்னத்தையும்,

மகன்கள் மற்றும் மகள்களுக்குமுரிய பெயர்களைவிடச் சிறந்த

ஒரு பெயரையும் கொடுப்பேன்.

ஒருபோதும் அழிந்துபோகாதிருக்கிற

நித்திய பெயரையும் அவர்களுக்குக் கொடுப்பேன்.

6 யெகோவாவை அண்டியிருந்து,

அவருக்கு ஊழியம் செய்து,

யெகோவாவினுடைய பெயரை நேசித்து அவரை வழிபடும் பிறதேசத்தார் அனைவருக்கும்,

ஓய்வுநாட்களை தூய்மைக்கேடாக்காமல்

அதைக் கைக்கொண்டு எனது உடன்படிக்கையை

உறுதியாய் பற்றிக்கொள்ளும் அனைவருக்கும் சொல்வதாவது:

7 நான் அவர்களை என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து,

என் ஜெபவீட்டில் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பேன்.

அவர்களின் தகனபலிகளும்,

மற்ற பலிகளும் எனது பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஏனெனில், எனது வீடு எல்லா நாடுகளுக்கும்

ஜெபவீடு என்று அழைக்கப்படும்.

8 நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரைச் சேர்க்கும்

ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்:

ஏற்கெனவே சேர்க்கப்பட்டவர்களோடுகூட

இன்னும் மற்றவர்களையும் நான் கூட்டிச்சேர்ப்பேன்."

கொடியோருக்கு விரோதமான இறைவன்

9 வயலின் மிருகங்களே, எல்லோரும் வாருங்கள்.

காட்டு மிருகங்களே, எல்லோரும் வந்து இரையை விழுங்குங்கள்.

10 இஸ்ரயேலின் காவலாளிகள் அனைவரும்

அறிவில்லாத குருடர்;

அவர்கள் எல்லோரும் குரைக்கமாட்டாத

ஊமையான நாய்கள்;

அவர்கள் படுத்துக் கிடந்து கனவு காண்கிறார்கள்,

நித்திரை செய்யவே விரும்புகிறவர்கள்.

11 அவர்கள் பெரும் பசிகொண்ட நாய்கள்;

அவர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.

பகுத்தறிவு இல்லாத மேய்ப்பர்கள்,

அவர்கள் எல்லாரும் தங்கள் சொந்த வழிக்குத் திரும்பி,

ஒவ்வொருவனும் தன் சுய இலாபத்தையே தேடுகிறார்கள்.

12 ஒவ்வொருவரும் சத்தமிட்டு, "வாருங்கள்;

நாம் போய் திராட்சைமது கொண்டுவருவோம்;

நாம் மதுவை நிறையக் குடிப்போம்,

நாளைய தினமும் இன்றுபோல் இருக்கும்,

அல்லது இதைவிடச் சிறப்பாகவும் இருக்கும்" என்கிறார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-