Publicidade

Isaías 43

இஸ்ரயேலின் ஒரே மீட்பர்

1 இப்போது யெகோவா சொல்வது இதுவே:

யாக்கோபே, உன்னைப் படைத்தவரும்,

இஸ்ரயேலே, உன்னை உருவாக்கியவரும் சொல்வதாவது,

"பயப்படாதே, நான் உன்னை மீட்டிருக்கிறேன்;

நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்திருக்கிறேன்; நீ என்னுடையவன்.

2 நீ தண்ணீரைக் கடக்கும்போது,

நான் உன்னுடன் இருப்பேன்;

நீ ஆறுகளைக் கடக்கும்போது,

அவை உன்னை அள்ளிக்கொண்டு போகாது;

நீ நெருப்பில் நடக்கும்போதும்

எரிந்து போகமாட்டாய்.

நெருப்பு சுவாலை உன்னை எரித்துப்போடாது.

3 ஏனெனில், நானே உங்கள் இறைவனாகிய யெகோவா,

இஸ்ரயேலின் பரிசுத்தராகிய நானே உன் இரட்சகர்;

நான் உன்னை மீட்கும் பொருளாக எகிப்தையும்,

உனக்குப் பதிலாக எத்தியோப்பியாவையும், சேபாவையும் கொடுக்கிறேன்.

4 நீ என் பார்வையில் அருமையானவன், மதிப்பிற்குரியவன்;

நான் உன்னில் அன்பாயிருக்கிறபடியினால்,

உனக்குப் பதிலாக மனிதரையும்,

உன் உயிருக்கு மாற்றீடாக நாடுகளையும் கொடுப்பேன்.

5 பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்;

நான் கிழக்கிலிருந்து உன் பிள்ளைகளைக் கொண்டுவருவேன்,

மேற்கிலிருந்து உங்களை ஒன்றுசேர்ப்பேன்.

6 நான் வடக்கைப் பார்த்து, ‘அவர்களை விட்டுவிடு!’ என்றும்,

தெற்கைப் பார்த்து, ‘அவர்களை பிடித்து வைத்துக்கொள்ளாதே’ என்றும் சொல்வேன்.

எனது மகன்களைத் தூரத்திலிருந்தும்,

எனது மகள்களைப் பூமியின் கடைசிகளிலிருந்தும் கொண்டுவாருங்கள்.

7 என் பெயரால் அழைக்கப்பட்ட ஒவ்வொருவரையும் கொண்டுவாருங்கள்.

இவர்களை நானே என் மகிமைக்காகப் படைத்தேன்.

இவர்களை நானே உருவாக்கி உண்டாக்கினேன்."

8 கண்களிருந்தும் குருடராயும்,

காதுகளிருந்தும் செவிடராயும் இருப்போரை வெளியே கொண்டுவாருங்கள்.

9 எல்லா நாடுகளும் ஒன்றுகூடுகிறார்கள்,

சகல மக்களும் சபையாய் கூடுகிறார்கள்;

அவர்களுடைய தேவர்களில் இதை முன்னறிவித்தவர் யார்?

இந்த பூர்வகாரியங்களை தெரிவித்தவர் யார்?

அவர்கள் தாங்கள் சரியென நிரூபிப்பதற்குத் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவரட்டும்;

அப்பொழுது மற்றவர்கள் அதைக்கேட்டு, "அது உண்மை" என்று சொல்லட்டும்.

10 "நீங்களே என் சாட்சிகளாயிருக்கிறீர்கள்" என்று யெகோவா அறிவிக்கிறார்.

"நீங்கள், நான் தெரிந்துகொண்ட என் ஊழியராய் இருக்கிறீர்கள்.

அதனால், நீங்கள் என்னை அறிந்து விசுவாசித்து,

நானே அவரென்று விளங்கிக்கொள்ளுவீர்கள்.

எனக்குமுன் ஒரு தெய்வம் உருவாக்கப்படவும் இல்லை,

எனக்குப்பின் எதுவும் இருக்கப்போவதுமில்லை.

11 நான், நானே யெகோவா,

என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை.

12 நானே வெளிப்படுத்தினேன், இரட்சித்தேன், பிரசித்தப்படுத்தினேன்;

உங்கள் மத்தியிலிருக்கும் எந்த அந்நிய தெய்வமுமல்ல.

நானே இறைவன் என்பதற்கு நீங்களே எனது சாட்சிகள்" என்று யெகோவா அறிவிக்கிறார்.

13 "ஆம், ஆதிநாட்களிலிருந்து நானே அவர்.

எனது கரத்திலிருந்து மக்களை விடுவித்துக்கொள்ள யாராலும் முடியாது.

நான் செயலாற்றும்போது அதை மாற்ற யாரால் முடியும்?"

இறைவனின் இரக்கம்

14 உங்கள் மீட்பரும், இஸ்ரயேலின் பரிசுத்தருமாகிய

யெகோவா கூறுவது இதுவே:

"உங்கள் நிமித்தம் பாபிலோனுக்கு நான் இராணுவத்தை அனுப்பி,

பாபிலோனியர் அனைவரையும் அகதிகளாகக் கொண்டுவருவேன்;

அவர்கள் பெருமைகொள்ளும் அவர்களுடைய கப்பல்களிலேயே அவர்களைக் கொண்டுவருவேன்.

15 நானே யெகோவா, உங்கள் பரிசுத்தர்;

இஸ்ரயேலைப் படைத்தவரும், உங்கள் அரசனும் நானே."

16 கடலிலே ஒரு வழியையும்,

பெரு வெள்ளத்திலே

ஒரு பாதையையும் உண்டாக்கியவர் அவரே;

17 தேர்களையும் குதிரைகளையும்,

இராணுவத்தையும் படைவீரர்களையும் ஒன்றுகூட்டி வந்தவரும்,

அவர்கள் ஒருபோதும் திரும்பவும் எழுந்திருக்க முடியாமல் விழச்செய்து,

திரியை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய யெகோவா சொல்வது இதுவே:

18 "முன்பு நடந்த காரியங்களை மறந்துவிடுங்கள்;

கடந்தகால நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்காதிருங்கள்.

19 இதோ, நான் ஒரு புதிய காரியத்தைச் செய்கிறேன்!

அது இப்போதே உண்டாகிறது; அது உங்களுக்குத் தெரியவில்லையா?

நான் பாலைவனத்தில் பாதையையும்,

பாழ்நிலத்தில் நீரூற்றுக்களையும் உண்டாக்குகிறேன்.

20 நான் தெரிந்துகொண்ட என் மக்களுக்குக் குடிக்கக் கொடுப்பதற்கு

பாலைவனத்தில் தண்ணீரையும்,

பாழ்நிலத்தில் நீரோடைகளையும் நானே வழங்குகிறேன்.

அதனால், காட்டு மிருகங்களான குள்ளநரிகளும், நெருப்புக் கோழிகளும்

என்னை கனம்பண்ணும்.

21 இந்த மக்களை எனது துதியைப் பிரசித்தப்படுத்தும்படி,

எனக்காக நானே உருவாக்கினேன்.

22 "அப்படியிருந்தும், யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை.

இஸ்ரயேலே, நீ எனக்காகப் பணிசெய்து களைக்கவுமில்லை.

23 நீங்கள் தகனகாணிக்கைக்கு செம்மறியாடுகளை எனக்கென கொண்டுவரவுமில்லை;

உங்கள் பலிகளால் என்னைக் கனம்பண்ணவும் இல்லை.

நானோ எனக்குத் தானிய காணிக்கைகளைக் கொடுக்கும்படி

உங்களைக் கஷ்டப்படுத்தவும் இல்லை;

தூபங்காட்டும்படி நான் உங்களை வற்புறுத்தி சலிப்படையச் செய்யவுமில்லை.

24 நீங்கள் நறுமணப்பட்டை எதையும் எனக்கென வாங்கவுமில்லை;

உங்கள் பலிகளின் கொழுப்புகளை எனக்குத் தாராளமாய் தரவுமில்லை.

ஆனால், உங்கள் பாவங்களினால் என்னைப் பாரமடையச் செய்திருக்கிறீர்கள்;

உங்கள் குற்றங்களினால் என்னைச் சலிப்படையச் செய்திருக்கிறீர்கள்.

25 "நான், நானே உங்கள் மீறுதல்களை உங்களைவிட்டு நீக்குகிறேன்;

நான் உங்கள் பாவங்களை இனியொருபோதும் நினைவில் வைப்பதில்லை,

இதை நான் எனக்காகவே செய்கிறேன்.

26 கடந்த காலத்தை எனக்காக நினைத்துப் பாருங்கள்,

நாம் இந்த காரியத்தைப்பற்றி ஒன்றுகூடி வாதாடுவோம்;

நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதற்கு ஆதாரங்களைச் சொல்லுங்கள்.

27 உங்கள். ஆதிமுற்பிதா பாவம் செய்தான்;

உங்களுக்காகப் பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாகக் கலகம் செய்தார்கள்.

28 ஆகையால் நான் உங்கள் ஆலயத்தின் தலைவர்களை அவமானப்படுத்துவேன்;

யாக்கோபை அழிவுக்கும்,

இஸ்ரயேலை இகழ்ச்சிக்கும் ஒப்புக்கொடுப்பேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-