Publicidade

Salmos 102

துயரப்படுகிறவன் துக்கத்தில் மூழ்கி யெகோவாவிடத்தில் தன் மனவேதனையை தெரியப்படுத்தும் விண்ணப்பம்.

1 யெகோவாவே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேளும்;

என்னுடைய ஜெபம் உம்மிடத்தில் சேர்வதாக.

2 என்னுடைய ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்;

உமது செவியை என்னிடத்தில் சாயும்;

நான் கூப்பிடுகிற நாளிலே எனக்கு விரைவாக பதில் சொல்லும்.

3 என்னுடைய நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது;

என்னுடைய எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரிந்தது.

4 என்னுடைய இருதயம் புல்லைப்போல் வெட்டப்பட்டு உலர்ந்தது;

என்னுடைய ஆகாரத்தைச் சாப்பிட மறந்தேன்.

5 என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.

6 வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்;

பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப் போலானேன்.

7 நான் தூக்கம் இல்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருக்கிறேன்.

8 நாள்தோறும் என்னுடைய எதிரிகள் என்னை நிந்திக்கிறார்கள்;

என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாகச் சாபம் இடுகிறார்கள்.

9 நீர் என்னை உயரத்தூக்கி, கீழேத் தள்ளினீர்,

உமது கோபத்திற்கும், கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.

10 ஆதலால், நான் சாம்பலை அப்பமாகச் சாப்பிட்டு,

என்னுடைய பானங்களைக் கண்ணீரோடு கலக்கிறேன்.

11 என்னுடைய ஆயுசு நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது;

புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.

12 யெகோவாவாகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்;

உம்முடைய பெயரின் புகழ் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

13 தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்;

அதற்கு தயவு செய்யும் காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.

14 உம்முடைய ஊழியக்காரர்கள் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து,

அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.

15 யெகோவா சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்.

16 திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்செய்யாமல்,

அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.

17 அப்பொழுது தேசங்கள் யெகோவாவுடைய பெயருக்கும்,

பூமியிலுள்ள ராஜாக்களெல்லோரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.

18 பின்சந்ததிக்காக இது எழுதப்படும்;

உருவாக்கப்படும் மக்கள் யெகோவாவை துதிப்பார்கள்.

19 யெகோவா கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும்,

கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,

20 தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து,

வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.

21 யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய, மக்களும் ராஜ்ஜியங்களும் ஒன்றாகக் கூடிக்கொள்ளும்போது,

22 சீயோனில் யெகோவாவுடைய பெயரையும்,

எருசலேமில் அவருடைய துதியையும் பறைசாற்றுவார்கள்.

23 பாதி வயதில் என்னுடைய பெலனை அவர் ஒடுக்கி,

என்னுடைய நாட்களைக் குறுகச்செய்தார்.

24 அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாமல் இரும்;

உம்முடைய வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.

25 நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்;

வானங்கள் உம்முடைய கரத்தின் செயல்களாக இருக்கிறது.

26 அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்;

அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும்.

27 நீரோ மாறாதவராக இருக்கிறீர்;

உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.

28 உமது அடியாரின் பிள்ளைகள் வாழ்ந்திருப்பார்கள்;

அவர்களுடைய சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-15_21-32-39-