Publicidade

Salmos 147

1 யெகோவாவை துதியுங்கள்;

நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது,

துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.

2 யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்;

துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.

3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்,

அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.

4 அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி,

அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.

5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்;

அவருடைய அறிவு அளவில்லாதது.

6 யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்;

துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார்.

7 யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்;

நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.

8 அவர் வானத்தை மேகங்களால் மூடி,

பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி,

மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.

9 அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.

10 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்;

வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார்.

11 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல்

யெகோவா பிரியமாக இருக்கிறார்.

12 எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்;

சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.

13 அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி,

உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.

14 அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி,

செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.

15 அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்;

அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.

16 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்;

சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.

17 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்;

அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?

18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்;

தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.

19 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும்,

இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.

20 அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை;

அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள்.

அல்லேலூயா.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_18-40-07-