Publicidade

Salmos 79

ஆசாபின் துதிப் பாடல்.

1 தேவனே, அன்னிய தேசத்தார்கள் உமது சுதந்தரத்தில் வந்து,

உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி,

எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள்.

2 உமது ஊழியக்காரர்களின் பிரேதங்களை வானத்துப் பறவைகளுக்கும்,

உமது பரிசுத்தவான்களின் சரீரத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.

3 எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்;

அவர்களை அடக்கம்செய்பவருமில்லை.

4 எங்களுடைய அயலாருக்கு நிந்தையும்,

எங்களுடைய சுற்றுப்புறத்தாருக்கு இகழ்ச்சியும், நகைப்புமானோம்.

5 எதுவரைக்கும் யெகோவாவே! நீர் என்றைக்கும் கோபமாக இருப்பீரோ?

உம்முடைய எரிச்சல் நெருப்பைப்போல் எரியுமோ?

6 உம்மை அறியாத தேசங்கள் மேலும்,

உமது பெயரை தொழுதுகொள்ளாத ராஜ்ஜியங்கள் மேலும்,

உம்முடைய கடுங்கோபத்தை ஊற்றிவிடும்.

7 அவர்கள் யாக்கோபை அழித்து,

அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.

8 முன்னோர்களுடைய அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாமலிரும்;

உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாக எங்களுக்கு நேரிடுவதாக;

நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.

9 எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது பெயரின் மகிமைக்காக எங்களுக்கு உதவிசெய்து,

உமது பெயருக்காக எங்களை விடுவித்து,

எங்களுடைய பாவங்களை மன்னியும்.

10 அவர்களுடைய தேவன் எங்கே என்று அன்னியதேசத்தார் சொல்வானேன்?

உமது ஊழியக்காரர்களுடைய சிந்தப்பட்ட இரத்தத்தின் பழிவாங்குதல்

தேசங்களுக்குள்ளே எங்களுடைய கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும்.

11 கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்;

கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது கரத்தினால் உயிரோடு காத்தருளும்.

12 ஆண்டவரே, எங்களுடைய அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை,

ஏழு மடங்காக அவர்களுடைய மடியிலே திரும்பச்செய்யும்.

13 அப்பொழுது, உம்முடைய மக்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்;

தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-15_21-32-39-