Publicidade

Salmos 45

கோராகு குமாரர்கள் எழுதின சங்கீதம்.

1 என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது;

நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்;

என்னுடைய நாவு விரைவாக எழுதுகிறவனுடைய எழுத்தாணி.

2 எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்;

உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது;

ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.

3 சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய

உம்முடைய வாளை நீர் உம்முடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு,

4 சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும்,

உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்;

உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கச்செய்யும்.

5 உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள்,

அவைகள் ராஜாவுடைய எதிரிகளின் இருதயத்திற்குள் பாயும்;

மக்கள்கூட்டங்கள் உமக்குக் கீழே விழும்.

6 உமக்கு தேவன் கொடுத்த சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது,

உமது ராஜ்ஜியத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது.

7 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்;

ஆதலால் தேவனே, உம்முடைய தேவன்

உமது தோழர்களைவிட உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்செய்தார்.

8 தந்தத்தினால் செய்த அரண்மனைகளிலிருந்து புறப்படும்போது,

நீர் மகிழும்படி உமது ஆடைகளை எல்லாம்

வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது.

9 உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு,

இளவரசி ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாக உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள்.

10 மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்;

உன்னுடைய மக்களையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

11 அப்பொழுது ராஜா உன்னுடைய அழகில் பிரியப்படுவார்;

அவர் உன்னுடைய ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.

12 தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்;

மக்களில் ஜசுவரியவான்களும் உன்னுடைய தயவை நாடி வணங்குவார்கள்.

13 இளவரசி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்;

அவளுடைய உடை பொற்சரிகையாக இருக்கிறது.

14 வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக,

ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்;

அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள்

உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள்.

15 அவர்கள் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் வந்து,

ராஜ அரண்மனைக்குள் நுழைவார்கள்.

16 உமது தகப்பன்மார்களுக்குப் பதிலாக உமது மகன்கள் இருப்பார்கள்;

அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.

17 உமது பெயரை எல்லாத் தலைமுறைகளிலும் நினைவுபடுத்துவேன்;

இதற்காக மக்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் துதிப்பார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-19_11-20-24-