Publicidade

Salmos 85

கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல்.

1 யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து,

யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.

2 உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து,

அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)

3 உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு,

உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.

4 எங்கள் இரட்சிப்பின் தேவனே,

நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும்,

எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும்.

5 என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ?

தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ?

6 உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி

நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?

7 யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து,

உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.

8 கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்;

அவர் தம்முடைய மக்களுக்கும்

தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்;

அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாமலிருப்பார்களாக.

9 நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி,

அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.

10 கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும்,

நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.

11 சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும்,

நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும்.

12 யெகோவா நன்மையானதைத் தருவார்;

நம்முடைய தேசமும் தன்னுடைய பலனைக் கொடுக்கும்.

13 நீதி அவருக்கு முன்னாகச் சென்று,

அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-15_21-32-39-