Publicidade

Salmos 53

தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

1 தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்;

அவர்கள் தங்களைக் கெடுத்து,

அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்;

நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,

தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார்.

3 அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;

நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.

4 அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா?

அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே;

அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை.

5 உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால்,

பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்;

தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.

6 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;

தேவன் தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,

யாக்கோபுக்குச் சந்தோஷமும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-15_21-32-39-