Publicidade

Salmos 94

1 நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவாவே,

நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.

2 பூமியின் நியாயாதிபதியே,

நீர் எழுந்து, பெருமைக்காரர்களுக்குப் பதிலளியும்.

3 யெகோவாவே, துன்மார்க்கர்கள் எதுவரைக்கும் மகிழ்ந்து,

எதுவரைக்கும் சந்தோஷமாக இருப்பார்கள்?

4 எதுவரைக்கும் அக்கிரமக்காரர்கள் அனைவரும் வாயாடி,

கடினமாகப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?

5 யெகோவாவே, அவர்கள் உமது மக்களை நொறுக்கி,

உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.

6 விதவையையும் அந்நியனையும் கொன்று,

திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:

7 யெகோவா பார்க்கமாட்டார்,

யாக்கோபின் தேவன் கவனிக்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.

8 மக்களில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்;

மூடர்களே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?

9 காதை உண்டாக்கினவர் கேட்கமாட்டாரோ?

கண்ணை உருவாக்கினவர் காணமாட்டாரோ?

10 தேசங்களைத் தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளமாட்டாரோ?

மனிதனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியமாட்டாரோ?

11 மனிதனுடைய யோசனைகள் வீணென்று யெகோவா அறிந்திருக்கிறார்.

12 யெகோவாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும்,

நீர் தீங்கு நாட்களில் அமர்ந்திருக்கச்செய்து,

13 தண்டித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு

போதிக்கிற மனிதன் பாக்கியவான்.

14 யெகோவா தம்முடைய மக்களைத் தள்ளிவிடாமலும்,

தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.

15 நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்;

செம்மையான இருதயத்தார்கள் அனைவரும் அதைப் பின்பற்றுவார்கள்.

16 துன்மார்க்கர்களுக்கு விரோதமாக

எனது சார்பாக எழும்புகிறவன் யார்?

அக்கிரமக்காரர்களுக்கு விரோதமாக எனது சார்பாக நிற்பவன் யார்?

17 யெகோவா எனக்குத் துணையாக இல்லாவிட்டால்,

என்னுடைய ஆத்துமா சீக்கிரமாக மவுனத்தில் தங்கியிருக்கும்.

18 என்னுடைய கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது,

யெகோவாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.

19 என்னுடைய உள்ளத்தில் கவலைகள் பெருகும்போது,

உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.

20 தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற துன்மார்க்கனுடைய ஆட்சி உம்மோடு இசைந்திருக்குமோ?

21 அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகக் கூட்டங்கூடி,

குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.

22 யெகோவாவோ எனக்கு அடைக்கலமும்,

என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாக இருக்கிறார்.

23 அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி,

அவர்களுடைய பொல்லாப்பினால் அவர்களை அழிப்பார்;

நம்முடைய தேவனாகிய யெகோவாவே அவர்களை அழிப்பார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_06-35-37-