Publicidade

Salmos 109

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1 இறைவனே, நான் துதிக்கும் இறைவனே,

நீர் மவுனமாய் இருக்கவேண்டாம்.

2 கொடுமையும், வஞ்சனையும் உள்ளவர்கள்,

தங்கள் வாய்களை எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறார்கள்;

பொய் நாவுகளால் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்.

3 அவர்கள் பகைமை நிறைந்த சொற்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்கிறார்கள்;

காரணமின்றி என்னைத் தாக்குகிறார்கள்.

4 அவர்கள் என் நட்புக்குப் பதிலாக என்னைக் குற்றம் சாட்டுகிறார்கள்,

நானோ மன்றாடும் மனிதனாகவே இருக்கிறேன்.

5 அவர்கள் நன்மைக்குப் பதிலாக, எனக்குத் தீமை செய்கிறார்கள்;

என் நட்புக்குப் பதிலாக என்னை வெறுக்கிறார்கள்.

6 என் பகைவனை எதிர்ப்பதற்கு ஒரு தீயவனை ஏற்படுத்தும்;

அவன் வலதுபக்கத்தில் நின்று அவனைக் குற்றஞ்சாட்டுவானாக.

7 அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாய் காணப்படட்டும்;

அவன் மன்றாட்டுகளும் அவனையே குற்றவாளியாய்த் தீர்ப்பதாக.

8 அவன் வாழ்நாட்கள் கொஞ்சமாவதாக;

அவனுடைய பதவியை மற்றவர்கள் எடுத்துக்கொள்வார்களாக.

9 அவன் பிள்ளைகள் தந்தையற்றவர் ஆகட்டும்,

அவன் மனைவி விதவையாகட்டும்.

10 அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுக்கட்டும்;

அவர்கள் தங்கள் பாழடைந்த வீடுகளிலிருந்தும் துரத்தப்படுவார்களாக.

11 கடன் கொடுத்தவன் அவனுக்குரிய எல்லாவற்றையும் பறித்துக் கொள்வானாக;

அவனுடைய பிரயாசத்தின் பலனை பிறர் கொள்ளையிடுவார்களாக.

12 ஒருவருமே அவனுக்கு தயவுகாட்டாமலும்,

அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்கு அனுதாபப்படாமலும் இருப்பார்களாக.

13 அவன் சந்ததிகள் மறைந்துபோவார்களாக;

அவன் பெயர் அடுத்த தலைமுறையிலிருந்து இல்லாமல் போவதாக.

14 அவன் முற்பிதாக்களின் அநியாயம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படுவதாக;

அவர்களுடைய தாயின் பாவம் ஒருபொழுதும் நீங்காதிருப்பதாக.

15 ஏனெனில் அவர்களுடைய பாவங்கள் எப்பொழுதுமே

யெகோவாவுக்கு முன்பாக நிலைத்திருக்கட்டும்;

அவர் அவர்களுடைய நினைவையும் பூமியிலிருந்து அகற்றட்டும்.

16 ஏனெனில் அவன் ஒருபோதும் நன்மை செய்வதைப்பற்றி நினைத்ததில்லை;

மாறாக ஏழைகளையும், எளியவர்களையும்,

உள்ளம் உடைந்தவர்களையும் கொலைசெய்யத் தேடினான்.

17 சாபம் இடுவதையே அவன் விரும்பினான்;

அவன் இட்ட சாபம் அவன் மேலேயே வருவதாக;

ஆசீர்வதிப்பதை அவன் விரும்பவில்லை,

ஆசீர்வாதம் அவனுக்குத் தூரமாவதாக.

18 அவன் சாபத்தையே தன் உடையாக அணிந்துகொண்டான்;

அது அவன் உடலுக்குள் தண்ணீரைப்போலவும்,

அவன் எலும்புகளுக்குள் எண்ணெயைப்போலவும் புகுந்தது.

19 சாபம் அவனைப் போர்த்தும் மேலங்கியைப்போல் இருப்பதாக;

அது அவனைச்சுற்றி கட்டப்பட்ட இடைக்கச்சையைப் போலவும் எப்போதும் இருப்பதாக.

20 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கும்,

என்னைக்குறித்துத் தீமையாய்ப் பேசுகிறவர்களுக்கும்

இதுவே யெகோவாவினால் கொடுக்கப்படும் தண்டனையாய் இருப்பதாக.

21 ஆனால், ஆண்டவராகிய யெகோவாவே,

நீர் உமது பெயரினிமித்தம் என்னை நன்றாய் நடத்தும்;

உமது அன்பின் நன்மையினிமித்தம் என்னை விடுவியும்.

22 ஏனெனில் நான் ஏழையும் எளியவனுமாய் இருக்கிறேன்,

என் இருதயம் எனக்குள் காயப்பட்டிருக்கிறது.

23 நான் ஒரு மாலை நிழல்போல் மங்கிப்போகிறேன்;

ஒரு வெட்டுக்கிளியைப்போல் உதறிப் போடப்படுகிறேன்.

24 உபவாசத்தினால் என் முழங்கால்கள் சோர்ந்துபோகின்றன;

என் உடல் மெலிந்து போயிருக்கிறது.

25 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு நான் ஓர் இகழ்ச்சிப் பொருளானேன்;

அவர்கள் என்னைப் பார்க்கும்போது, ஏளனமாய் தங்கள் தலைகளை அசைக்கிறார்கள்.

26 யெகோவாவே, என் இறைவனே, எனக்கு உதவிசெய்யும்;

உமது அன்பின்படியே என்னைக் காப்பாற்றும்.

27 யெகோவாவே, உமது கரமே அதைச் செய்தது என்றும்,

நீரே அதைச் செய்தீர் என்றும் அவர்கள் அறியட்டும்.

28 அவர்கள் என்னைச் சபித்தாலும், நீர் என்னை ஆசீர்வதிப்பீர்;

அவர்கள் என்னைத் தாக்கும் வேளையில் அவர்கள் வெட்கத்திற்குட்படுவார்கள்;

ஆனால் உமது அடியானாகிய நான் களிகூருவேன்.

29 என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் அவமானத்தால் மூடப்படுவார்கள்;

ஓர் அங்கியினால் போர்த்தப்படுவதுபோல் அவர்கள் வெட்கத்தால் போர்த்தப்படுவார்கள்.

30 நான் யெகோவாவை என் வாயினால் பெரிதும் புகழ்ந்து உயர்த்துவேன்;

பெருங்கூட்டத்தில் நான் அவரைத் துதிப்பேன்.

31 ஏனெனில் அவர் வறுமைப்பட்டவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறார்;

அவனைக் குற்றவாளியாய்த் தீர்ப்பிடுகிறவர்களிடமிருந்து

அவனுடைய உயிரைக் காப்பாற்ற நிற்கிறார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-