Publicidade

Salmos 44

கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம்.

1 இறைவனே, வெகுகாலத்திற்குமுன்

எங்கள் முன்னோர்களின் நாட்களில் நீர் செய்தவற்றை

அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்;

அவற்றை நாங்கள் எங்கள் காதுகளால் கேட்டிருக்கிறோம்.

2 நீர் உமது கரத்தால் நாடுகளை வெளியே துரத்தி,

எங்கள் முன்னோர்களைக் குடியமர்த்தினீர்;

நீர் அந்நாட்டினரை தண்டித்து,

எங்கள் முன்னோரைச் செழிக்கப் பண்ணினீர்.

3 அவர்கள் தங்கள் வாளினால் நாட்டை உடைமையாக்கவும் இல்லை,

அவர்களுடைய புயத்தால் அவர்கள் வெற்றிகொள்ளவும் இல்லை;

நீர் அவர்களில் பிரியம் கொள்வதினால் உமது வலதுகரமும் உமது வலிய புயமும்

உமது முகத்தின் ஒளியுமே வெற்றிகொள்ளச் செய்தது.

4 இறைவனே, நீரே என் அரசன்;

யாக்கோபுக்கு வெற்றியைக் கட்டளையிடுகிறவர் நீரே.

5 உம்மாலே நாங்கள் எங்கள் பகைவர்களை விழத்தள்ளி,

உமது பெயராலே எங்கள் எதிரிகளை மிதிப்போம்.

6 என் வில்லிலே நான் நம்பிக்கை வைக்கிறதில்லை,

என் வாள் வெற்றியைக் கொடுப்பதில்லை;

7 ஆனால் நீரே எங்கள் பகைவர்கள்மீது வெற்றியைக் கொடுத்து,

எங்கள் விரோதிகளை வெட்கப்படுத்துகிறீர்.

8 நாங்களோ நாள்தோறும் இறைவனிலேயே பெருமை பாராட்டுகிறோம்;

நாங்கள் உமது பெயரை என்றென்றும் துதிப்போம்.

9 இப்பொழுதோ நீர் எங்களைப் புறக்கணித்து, சிறுமைப்படுத்திவிட்டீர்;

நீர் எங்கள் இராணுவத்துடன் செல்வதுமில்லை.

10 எங்கள் பகைவருக்கு முன்பாக எங்களைப் பின்வாங்கச் செய்தீர்;

எங்கள் விரோதிகள் எங்களைச் சூறையாடி விட்டார்கள்.

11 செம்மறியாடுகளைப்போல் நீர் எங்களை இரையாகக் விட்டுக்கொடுத்தீர்;

நாடுகளுக்கு மத்தியில் எங்களைச் சிதறடித்தீர்.

12 நீர் உமது மக்களை மலிவாக விற்றுப் போட்டீர்;

அவர்களை எவ்வித இலாபமுமின்றி விற்றுப்போட்டீரே.

13 எங்கள் அயலவருக்கு எங்களை ஒரு நிந்தையாக்கி விட்டீர்;

எங்களைச் சுற்றி இருக்கிறவர்களுக்கு எங்களை இகழ்ச்சியும் ஏளனமும் ஆக்கினீர்.

14 நீர் எங்களைப் நாடுகளுக்கு நடுவில் ஒரு பழமொழியாக ஆக்கினீர்;

மக்கள் கூட்டம் எங்களைப் பார்த்து ஏளனமாய்த் தங்கள் தலையை அசைக்கிறார்கள்.

15 நாள்தோறும் நான் அவமானத்தில் வாழ்கிறேன்;

என் முகம் வெட்கத்தினால் மூடப்பட்டிருக்கிறது.

16 என்னை நிந்தித்துத் தூஷித்து பழிவாங்கத் துடிக்கும்

பகைவர்களின் நிந்தனைகளினாலேயே வெட்கப்படுகிறேன்.

17 நாங்கள் உம்மை மறவாமல் இருந்தோம்;

உமது உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்தோம்;

ஆனாலும், இவையெல்லாம் எங்களுக்கு நடந்தன.

18 எங்கள் இருதயம் பின்வாங்கவுமில்லை,

எங்கள் பாதங்கள் உமது வழியைவிட்டு விலகவுமில்லை.

19 ஆனாலும் நீர் எங்களை இடித்து, எங்கள் இடங்களை நரிகளின் உறைவிடமாக்கினீர்;

காரிருளினால் எங்களை மூடினீர்.

20 எங்கள் இறைவனின் பெயரை நாங்கள் மறந்திருந்தால்,

அல்லது வேறுநாட்டின் தெய்வமல்லாததை நோக்கி எங்கள் கைகளை நீட்டியிருந்தால்,

21 இறைவன் அதைக் கண்டுபிடியாமல் இருந்திருப்பாரோ?

அவர் இருதயத்தின் இரகசியங்களை அறிகிறவராய் இருக்கிறாரே.

22 ஆனாலும் உமக்காகவே நாங்கள் நாள்முழுதும் மரணத்தை சந்திக்கிறோம்;

அடித்துக் கொல்லப்பட இருக்கும் செம்மறியாடுகளைப்போல் எண்ணப்படுகிறோம்.

23 யெகோவாவே, எழுந்தருளும்! ஏன் நித்திரை செய்கிறீர்?

விழித்துக்கொள்ளும்! எங்களை என்றென்றும் புறக்கணியாதேயும்.

24 நீர் ஏன் உமது முகத்தை மறைத்து,

எங்கள் துன்பத்தையும் நாங்கள் ஒடுக்கப்படுவதையும் மறந்துவிடுகிறீர்?

25 நாங்கள் தூசியில் தள்ளப்பட்டிருக்கிறோம்;

எங்கள் உடல்கள் தரையோடு ஒட்டியிருக்கிறது.

26 நீர் எழுந்து எங்களுக்கு உதவிசெய்யும்;

உமது உடன்படிக்கையின் அன்பினால் எங்களை மீட்டுக்கொள்ளும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-