Publicidade

Salmos 45

"லீலிமலர்கள்" என்ற சுருதியிலே வாசிக்கக் கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட திருமணப் பாடலாகிய சங்கீதம்.

1 அரசனைப் புகழ்ந்து, நான் கவிகளைப் பாடும்போது,

அதின் உயர்வான கருப்பொருளால் என் உள்ளம் பொங்குகிறது;

என் நாவு சிறந்த ஓர் எழுத்தாளனின் எழுதுகோல்.

2 மனுஷரெல்லாரிலும் அழகுமிக்கவர் நீரே,

இறைவன் என்றென்றுமாய் உம்மை ஆசீர்வதித்திருப்பதால்,

உமது உதடுகளில் கிருபை பொழிகிறது.

3 வலிமை மிகுந்தவரே, உமது வாளை எடுத்து உமது இடையில் கட்டிக்கொள்ளும்;

மகிமையினாலும் மகத்துவத்தினாலும் உம்மை உடுத்திக்கொள்ளும்.

4 உண்மையும் தாழ்மையும் நீதியும் உயர,

உமது மகத்துவத்தில் வெற்றியுடன் விரைந்து வாரும்;

உமது வலதுகரம் பயங்கரமான செயல்களைச் செய்யட்டும்.

5 உமது கூர்மையான அம்புகள் அரசனின் பகைவருடைய இருதயத்திற்குள் பாயட்டும்;

நாடுகள் உமது பாதத்தின்கீழ் வீழ்ச்சியடையட்டும்.

6 இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும்;

நீதியே உம்முடைய அரசின் செங்கோலாயிருக்கும்.

7 நீர் நீதியை விரும்பி அநீதியை வெறுக்கிறீர்;

ஆகையால் இறைவனே, உமது இறைவன் உம்மை மகிழ்ச்சியின் எண்ணெயால் அபிஷேகித்து,

உமது தோழர்களுக்கு மேலாக உம்மை உயர்த்திவைத்தார்.

8 உமது ஆடைகளை எல்லாம் வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கம்

ஆகியவற்றின் வாசனை பொருந்தியதாக இருக்கிறது.

யானைத் தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனைகளிலிருந்து வரும்,

கம்பியிசைக் கருவிகளின் இசை உம்மை மகிழ்விக்கிறது.

9 உமது கனம்பொருந்திய பெண்கள் நடுவில் அரச குமாரத்திகளும் இருக்கிறார்கள்.

அரச மணமகளோ, ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபக்கத்தில் நிற்கிறாள்.

10 மகளே கேள், உன் செவியைச் சாய்த்துக் கவனி:

உன் மக்களையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

11 அரசர் உன் அழகில் பிரியப்படுவார்;

அவரே உனது யெகோவா, ஆதலால் அவரை கனம்பண்ணு.

12 தீரு நகர மக்கள் ஒரு வெகுமதியுடன் வருவார்கள்;

செல்வந்தர் உன் தயவை நாடுவார்கள்.

13 இளவரசி எல்லா மகிமையோடும் அவளது அறைக்குள் இருக்கிறாள்;

அவளுடைய உடை தங்கச் சரிகையாயிருக்கிறது.

14 அவள் அலங்கார வேலைப்பாடு கொண்ட உடைகளோடு

அரசனிடம் அழைத்துச் செல்லப்படுகிறாள்;

அவளுடைய தோழியர்களாகிய கன்னியர்கள்

அவளைத் தொடர்ந்து உம்மிடம் அழைத்து வருகிறார்கள்.

15 அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும்

அவர்கள் அரசனின் அரண்மனைக்குள் வருகிறார்கள்.

16 உம்முடைய மகன்கள் உமது முற்பிதாக்களின் இடத்தில் நிலைத்திருப்பார்கள்;

அவர்களை நீர் நாடு முழுவதிலும் இளவரசர்களாகும்படி செய்வீர்.

17 நான் எல்லா தலைமுறைகளின் நடுவிலும்

உம்மைக் குறித்த நினைவுகளை நிலைபெறச் செய்வேன்;

அதினால் மக்கள் கூட்டம் உம்மை என்றென்றைக்கும் துதிப்பார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-