Publicidade

Salmos 14

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1 "இறைவன் இல்லை" என்று

மூடன் தன் இருதயத்தில் சொல்கிறான்.

அவர்கள் சீர்கெட்டவர்கள், அவர்களுடைய செயல்கள் இழிவானவை;

நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.

2 யெகோவா பரலோகத்திலிருந்து

மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார்,

அவர்களில் விவேகமுள்ளவனாவது

இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.

3 எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்;

நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை,

ஒருவனாகிலும் இல்லை.

4 தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ?

மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்;

அவர்கள் யெகோவாவை வழிபடுவதுமில்லை.

5 அவர்கள் அங்கே பயத்தில் நடுங்குகிறார்கள்;

ஏனெனில் இறைவன் நீதிமான்களின் கூட்டத்தில் இருக்கிறார்.

6 தீமை செய்கிறவர்களே, நீங்கள் ஏழைகளின் திட்டங்களைக் குழப்புகிறீர்கள்;

ஆனால் யெகோவாவோ ஏழைகளின் தஞ்சம்.

7 சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக!

யெகோவா தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது

யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-