Publicidade

Salmos 58

"அழிக்காதே" என்ற இசையில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம்.

1 ஆளுநர்களே, உண்மையிலேயே நீங்கள் நீதியைத்தான் பேசுகிறீர்களோ?

மனிதர் மத்தியில் நியாயமாய்த் தீர்ப்பு செய்கிறீர்களோ?

2 இல்லை, நீங்கள் உங்கள் இருதயத்தில் அநீதியையே திட்டமிடுகிறீர்கள்;

உங்கள் கைகள் பூமியின்மேல் வன்முறையைப் பரப்புகிறது.

3 கொடியவர்கள் பிறப்பிலிருந்தே வழிதப்பிப் போகிறார்கள்;

அவர்கள் கர்ப்பத்திலிருந்தே பொய்களைப் பேசுகிறார்கள்.

4 அவர்களுடைய நச்சுத்தன்மை ஒரு பாம்பின் நஞ்சைப்போல் இருக்கிறது;

அவர்கள் காதை அடைத்துக்கொள்கிற செவிட்டு நாகம்போல இருக்கிறார்கள்.

5 இந்த நாகபாம்போ, பாம்பாட்டி எவ்வளவு திறமையாய் ஊதினாலும்

அவனுடைய இசைக்குக் கவனம் செலுத்தாது.

6 இறைவனே, அவர்களுடைய வாயிலுள்ள பற்களை உடைத்துப்போடும்;

யெகோவாவே, அந்த சிங்கங்களின் கடைவாய்ப் பற்களைப் பிடுங்கிப்போடும்.

7 ஓடிப்போகும் தண்ணீரைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்;

அவர்கள் தங்கள் வில்லை இழுக்கும்போது, அவர்களுடைய அம்புகள் முறிந்து போகட்டும்.

8 நகரும்போதே கரைந்து போகும் நத்தையைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்;

ஒரு பெண்ணின் வயிற்றில் சிதைந்த கருவைப்போல,

சூரியனை அவர்கள் பார்க்காமல் போகட்டும்.

9 முட்செடிகள் எரிந்து பானை அதின் சூட்டை உணருவதற்கு முன்பதாகவே,

பச்சையானதையும் எரிந்துபோனதையும் சுழற்காற்று வாரியதைப்போல

கொடியவர்களை வாரிக்கொள்ளும்.

10 அவர்கள் பழிவாங்கப்படும்போது நீதிமான்கள் மகிழ்வார்கள்;

கொடியவர்களின் உயிர் நீதிமான்களின் பாதபடியில் இருக்கும்.

11 அப்பொழுது மனிதர்,

"நிச்சயமாகவே நீதிமான்களுக்கு வெற்றி உண்டென்றும்

பூமியை நியாயந்தீர்க்கும் இறைவன் உண்டு" என்றும் சொல்வார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-