Publicidade

Salmos 53

மகலாத் என்னும் பாணியில் வாசிக்கப்படும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் தாவீதின் சங்கீதம்.

1 மூடன் தன் இருதயத்தில், "இறைவன் இல்லை" என்று சொல்கிறான்.

அவர்கள் சீர்கெட்டவர்கள்;

அவர்களுடைய வழிகள் இழிவானவை;

அவர்களில் நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.

2 இறைவன் பரலோகத்திலிருந்து

மனுமக்களை நோக்கிப் பார்க்கிறார்,

அவர்களில் விவேகமுள்ளவனாவது

இறைவனைத் தேடுகிறவனாவது உண்டோ என்று பார்க்கிறார்.

3 எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்;

நன்மை செய்கிறவன் ஒருவனுமில்லை,

ஒருவனாகிலும் இல்லை.

4 தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ?

மனிதர் அப்பம் சாப்பிடுவதுபோல், அவர்கள் என் மக்களை விழுங்குகிறார்கள்;

அவர்கள் இறைவனை வழிபடுவதுமில்லை.

5 பயப்படுவதற்கு எதுவுமில்லாத இடத்திலே,

அவர்கள் பயத்தில் நடுங்குகிறார்கள்.

உன்னைத் தாக்கியவர்களின் எலும்புகளை இறைவன் சிதறடித்தார்;

இறைவன் அவர்களைப் புறக்கணித்தபடியால், நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.

6 சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக!

இறைவன் தமது மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,

யாக்கோபு மகிழட்டும், இஸ்ரயேல் களிகூரட்டும்!

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-