Publicidade

Salmos 72

சாலொமோனின் சங்கீதம்.

1 இறைவனே, அரசனுக்கு உமது நியாயமான தீர்ப்பையும்

இளவரசனுக்கு உமது நீதியையும் கொடும்.

2 அப்பொழுது அவர் உமது மக்களை நீதியோடும்,

துன்பப்பட்ட உம்முடையவர்களை நேர்மை தவறாமலும் நியாயந்தீர்ப்பார்.

3 மலைகள் அனைவருக்கும் செழிப்பை உண்டாக்கட்டும்,

குன்றுகள் நீதியின் பலனைக் கொண்டுவரட்டும்.

4 மக்கள் மத்தியில் ஒடுக்கப்பட்டவர்களை அவர் பாதுகாத்து,

ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாற்றட்டும்;

ஒடுக்குவோரை அவர் நொறுக்கிப்போடட்டும்.

5 சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும்,

தலைமுறை தலைமுறையாக அவர்கள் உமக்குப் பயந்திருப்பார்கள்.

6 அரசர் புல்வெட்டப்பட்ட வயலின்மேல் பொழியும் மழையைப்போலவும்,

பூமியை நீர்ப்பாய்ச்சும் மழைத்தூறலைப் போலவும்

அரசரின் ஆட்சி புத்துணர்ச்சி அடையட்டும்.

7 அவருடைய நாட்களில் நீதிமான்கள் செழிப்பார்கள்;

சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.

8 ஒரு கடலில் இருந்து மறுகடல் வரைக்கும்,

நதிதொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அரசர் ஆளுகை செய்யட்டும்.

9 பாலைவன வாசிகள் அவருக்குமுன் பணிவார்கள்;

அவருடைய பகைவர்கள் மண்ணை நக்குவார்கள்.

10 தர்ஷீசு மற்றும் தூரத்து தீவுகளின் அரசர்கள்

அவருக்கு காணிக்கைகளைக் கொண்டுவரட்டும்;

ஷேபாவும், சேபாவின் அரசர்களும்

அவருக்கு அன்பளிப்புகளைக் கொடுக்கட்டும்.

11 எல்லா அரசர்களும் அவரை வணங்கட்டும்;

எல்லா நாடுகளும் அவருக்குப் பணிவிடை செய்யட்டும்.

12 ஏனெனில் கதறுகின்ற ஏழைகளையும்

உதவி செய்வாரின்றித் தவிக்கும் எளியோரையும் அவர் விடுவிப்பார்.

13 பலவீனருக்கும் எளியோருக்கும் அவர் அனுதாபங்காட்டி,

எளியோரை மரணத்திலிருந்து காப்பாற்றுவார்.

14 அவர்களை ஒடுக்குதலுக்கும் வன்செயலுக்கும் தப்புவிப்பார்;

ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கை அவருடைய பார்வையில் விலையுயர்ந்ததாய் இருக்கும்.

15 அவர் நீடித்து வாழ்வாராக!

சேபாவின் தங்கம் அவருக்குக் கொடுக்கப்படுவதாக;

மக்கள் எக்காலத்திலும் அவருக்காக மன்றாடி,

நாள்தோறும் அவரை ஆசீர்வதிப்பார்களாக.

16 நாட்டிலே தானியம் மிகுதியாக விளையட்டும்;

குன்றுகளின் உச்சியில் தானியக்கதிர்கள் அசையட்டும்;

அதின் உற்பத்தி லெபனோனைப்போல செழிக்கட்டும்;

அதின் பட்டணத்தார் வெளியின் புல்லைப்போல் செழித்து வளருவார்களாக.

17 அவருடைய பெயர் என்றும் நிலைத்திருப்பதாக;

சூரியன் உள்ளமட்டும் அது தொடர்ந்திருப்பதாக.

எல்லா நாடுகளும் அவர்மூலம் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள்;

அவர்கள் அவரை ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று அழைப்பார்கள்.

18 இஸ்ரயேலின் இறைவனாயிருக்கிற, யெகோவாவாகிய இறைவனுக்குத் துதி உண்டாவதாக;

அவர் அதிசயமான செயல்களைச் செய்கிறார்.

19 அவருடைய மகத்துவமான பெயர் என்றென்றும் துதிக்கப்படுவதாக;

பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிரம்புவதாக.

ஆமென், ஆமென்.

20 ஈசாயின் மகன் தாவீதின் மன்றாட்டுகள் இத்துடன் நிறைவுபெறுகின்றன.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-