1 யாருடைய மீறுதல்கள் மன்னிக்கப்பட்டதோ,
யாருடைய பாவங்கள் மூடப்பட்டதோ,
அவர்கள் பாக்கியவான்கள்.
2 யாருடைய பாவத்தைக்குறித்து,
அவர்களுக்கு விரோதமாக யெகோவா கணக்கிடாதிருக்கிறாரோ,
யாருடைய ஆவியில் வஞ்சனை இல்லாதிருக்கிறதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
3 நான் என் பாவத்தைக்குறித்து மவுனமாய் இருந்தபோது,
தினமும் என் அழுகையினால்,
என் எலும்புகள் பலவீனமாயிற்று.
4 இரவும் பகலும்
உமது கரம் பாரமாயிருந்தது;
ஆதலால், கோடைகால வெப்பத்தினால் ஈரம் வறண்டுபோகிறது போல,
என் பெலன் வறண்டுபோயிற்று.
5 அதின்பின் நான் என் பாவத்தை
உம்மிடத்தில் ஒத்துக்கொண்டேன்;
என் அநியாயத்தையும் நான் மறைக்கவில்லை.
நான், "யெகோவாவிடம் என் மீறுதல்களை அறிக்கையிடுவேன்"
என்று சொன்னேன்;
நீர் என் பாவத்தின் குற்றத்தை மன்னித்தீர்.
6 ஆகவே பக்தியுள்ள ஒவ்வொருவரும் உம்மைக் காணத்தக்க காலத்தில்
உம்மை நோக்கி மன்றாடட்டும்;
பெருவெள்ளம் எழும்பும்போது
நிச்சயமாய் அது அவர்களை அணுகாது.