1 மகா உன்னதமானவரின் அடைக்கலத்தில் வாழ்கிறவன்,
எல்லாம் வல்லவரின் நிழலில் இளைப்பாறுவான்.
2 நான் யெகோவாவைக் குறித்து, "அவரே என் புகலிடம், என் கோட்டை,
நான் நம்பியிருக்கிற என் இறைவன்" என்று சொல்வேன்.
3 நிச்சயமாகவே அவர் உன்னை
வேடனுடைய கண்ணியிலிருந்தும்,
கொன்றழிக்கும் கொள்ளைநோயிலிருந்தும் தப்புவிப்பார்.
4 யெகோவா தமது சிறகுகளால் உன்னை மூடுவார்;
அவருடைய சிறகுகளின் கீழே நீ புகலிடம் காண்பாய்;
அவருடைய சத்தியம் உனது கேடயமும் கவசமுமாயிருக்கும்.